16th of December 2013
13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தில் உள்ள பிரிவினைவாத அதிகாரங்களை நீக்க வேண்டாம் என கோஷமிட்ட அரசாங்கத்தில் உள்ள சிலர், சிங்கக் கொடியை ஏற்ற போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கூறும் போது அமைதியாக இருப்பதாக அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கின் ஆளுநரை நீக்க கூட்டமைப்பினர் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இன்னும் மூன்று மாதங்களில் போராட்டத்தை ஆரம்பிக்க போவதாகவும் அவர்கள் கூறியுள்ள்னர்.
13வது திருத்தச் சட்டத்தில் உள்ள அதிகாரங்களை நீக்க வேண்டாம் என்று கோஷமிட்டவர்கள் இந்த விடயங்கள் தொடர்பில் ஏன் மௌனமாக உள்ளனர்?.
பிரிவினைவாதத்திற்கு வழியமைத்து கொடுக்கும் 13வது திருத்தச் சட்டத்தில் உள்ள பிரிவினைவாத அதிகாரங்கள் உடனடியாக நீக்கப்பட வேண்டியது அவசியமானது. இதனை நீக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.
சகாவுக்கு தனது அமைச்சின் மூலம் 45 ஆயிரம் சம்பளம் வழங்கும் வீரவன்ஸ
தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் மாநகர சபை உறுப்பினருமான மொஹமட் முஸ்ஸாமிலுக்கு அமைச்சர் விமல் வீரவன்ஸ தனது அமைச்சின் ஊடாக 45 ஆயிரம் ரூபாவை மாத சம்பளமாக வழங்கி வருகிறார்.
விமல் வீரவன்ஸவின் வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சின் கீழ் வரும் அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளராக முஸ்ஸாமிலை நியமித்துள்ள அமைச்சர், இந்த சம்பளத்தை வழங்கி வருகிறார்.
45 ஆயிரம் ரூபா சம்பளத்திற்கு மேல் கிடைத்து வரும் ஏனைய கொடுப்பனவுகள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.
முஸ்ஸாமில் தன்னை ஏகாதிபத்திய எதிர்ப்பாளர் என்று கூறிக்கொள்கிறார். கல்யாண வீட்டுக்குள் புகுந்து குழப்பும் கீழ்த்தரமான மனிதர்கள் தாம் இல்லை என்பதால் பொதுநலவாய நாடுகளி மாநாட்டுக்கு எதிர்ப்பை வெளியிடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை மாநகர சபை உறுப்பினராக இருந்து கொண்டு கூட்டுத்தாபனம் ஒன்றின் பணிப்பாளராக 45 ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்றுக்கொள்ளும் நல்லொழுக்கத்தை தான் ஏற்றுக்கொள்வதாகவும் முஸ்ஸாமில் கூறியுள்ளார்.
ஏகாதிபத்திய எதிர்ப்பு, முதலாளித்துவ எதிர்ப்பு என மக்கள் மத்தியில் பேசி தம்மை வீரர்களாக இனங்காட்டிக் கொள்ளும் வீரவன்ஸ போன்றவர்கள் திரைமறைவில் அவற்றுக்கு முற்றும் புறம்பான வகையில் செயற்பட்டு வருவதாக நோக்கர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
No comments:
Post a Comment