18th of December 2013
தெற்காசியாவின் சிறந்த சிறுவர் நட்பு நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு முதலிடம் கிடைத்துள்ளது. சார்க் அமைப்பிற்கு இணைவான சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை எதிர்க்கும் தென்னாசிய வலய ஒன்றியம் மேற்கொண்ட கணிப்பின் மூலம் இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2 வருடகாலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் கணிப்பிடப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மகளிர் விவகார மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சர் திஸ்ஸ கரலியத்த அறிக்கையை கையளித்தார். 292 பக்கங்களைக் கொண்டதாக அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களின் உரிமைகளை பாதுகாத்தல், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய விடயங்கள் தொடர்பிலும் அறிக்கையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது நாடு பெற்ற வெற்றியாகுமென அமைச்சர் திஸ்ஸ கரலியத்த குறிப்பிட்டுள்ளார்.
உலகில் எந்த நாட்டிலும் இல்லாத சிறுவர்கள் மீது அன்பு செலுத்தும் அரச தலைவர் ஒருவர் இலங்கையில் காணப்படுகின்றார். அலரி மாளிகைக்கு அடிக்கடி சிறுவர்கள் வருகை தருவது வழமையாகும்.
அவர்களுடன் நட்பாக கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரம் ஒதுக்குகின்றமை விசேட விடயமாகும். உலகில் எந்தவொரு தலைவரும் இவ்வாறு செயற்படுவதில்லை.
ஜனாதிபதியின் செயற்பாடு முழு உலகத்திற்கும் எடுத்துக்காட்டாகுமென அமைச்சர் திஸ்ஸ கரலியத்த குறிப்பிட்டுள்ளார். இதேவேளை சிறுவர்களின் நலன் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு சர்வதேச சமூகம் பாராட்டு தெரிவித்துள்ளது.
சிறுவர்கள் தொடர்பில் அக்கறை செலுத்தும் நாடுகளில் இலங்கை முன்னிலையிலிருப்பதாக தெற்காசிய பிராந்தியத்திற்கான சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் பணிப்பாளர் கலாநிதி ரின்ச்சென் சொப்பேல் தெரிவித்ததாக எமது விசேட பிரதிநிதி ஜே.யோகராஜ் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment