Thursday, December 19, 2013

தமிழ் தேசிய தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்!

19th of December 2013
தமிழ் தேசிய தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரொருவர் கிழக்குப் பல்கலைக் கழகம் தொடர்பாக தெரிவித்திருந்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று எதிர்ப்புக் போராட்டமொன்று நடாத்தப்பட்டது.
 
கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தின் பிரதான வீதியோரத்தில் நடாத்தப்பட்ட இந்த எதிர்ப்புப் போராட்டத்தின் போது துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
இதில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள், கல்விசாரா ஊழியர்களும் கலந்துகொண்டனர்.
 
30 வருட காலமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழகம் தற்போது படிப்படியாக முன்னேற்றமடைந்து வருகின்றது.
 
தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரின் கருத்து பல்கலைக்கழகத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதாகவும் பல்கலைக்கழக சமூகம் இந்த கருத்தினை கண்டிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு பல்கலைக்கழக சமூகம் என குறிப்பிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள துண்டுப்பரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
 
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பொன் செல்வராசா அவர்கள் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஊழல் இடம்பெறுவதாக கடந்த ஆறாம் திகதி பாராளுமன்றத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டினை முன்வைத்தமை, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நற்பெயரையும் புகழையும் களங்கப்படுத்திய ஒரு செயலாகும். இச் செயலானது பல்கலைக் கழக சமூகத்தினரிடையே மிகப்பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 
பல்கலைக்கழக அபிவிருத்தியில் இதுவரை எவ்வித அக்கறையோ அல்லது நேரடி பங்களிப்போ செய்யாத கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா அவர்கள் மிகுந்த முனைப்புடன் அபிவிருத்திப் பாதையில் வேகமாக நடைபோட்டுக் கொண்டிருக்கின்ற எமது ஒட்டுமொத்த பல்கலைக்கழகத்திற்கும் அதன் உபவேந்தருக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் பாராளுமன்றத்திலே உரையாற்றியிருப்பதானது, எமது பல்கலைக்கழக சமூகத்திற்கும் அதன்பால் அக்கறை கொண்டுள்ள அனைவருக்கும் மிகுந்த வேதனையையும் ஆத்திரத்தையும் உண்டு பண்ணியிருக்கிறது.
 
கிழக்குப் பல்கலைக்கழகம் கடந்த மூன்று தசாப்த காலமாக யுத்தத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு படிப்படியாக பல்வேறு வழிகளிலும் அபிவிருத்தி கண்டுவரும் நிலையில் அதனை வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் எமக்கு உள்ளது.
 
இங்கு ஊழல் இடம்பெறுகின்றன என்று எழுந்தமானமாக கருத்துக்களை பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருப்பதானது பல்கலைக்கழக சமூகத்தினரிடையேயும் பல்கலைக்கழக நலன் விரும்பிகள் மத்தியிலும் அதிருப்தியையும் வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
 
மட்டக்களப்பு மக்களின் பெறுமதியான வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் சென்று, மட்டக்களப்பு மக்களே பெரும் சொத்தாக மதிக்கின்ற கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு சேறு பூசும் வகையில், விளக்கமற்ற பொறுப்பற்ற பேச்சுக்களை பொன் செல்வராசா எம்பி அவர்கள் நிறுத்திவிட்டு, உங்கள் பகுதியில் இருக்கின்ற கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு நேரடியான விஜயம் செய்து தெளிவுகளைப் பெற்ற பின் உங்கள் சொற்பொழிவுகளை மேற்கொள்வீர்களாக இருந்தால் பெறுமதியாக இருக்குமென வேண்டிக் கொள்கிறோம் என அந்த துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...