Saturday, January 4, 2014

நலன்புரி நிலையங்கள் மூடப்படவேண்டும் – மீள்குடியேற்ற அமைச்சர்!

Sunday,5th of January 2014
யாழ். மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையங்களை விரைவில் மூடிவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரகோன் தெரிவித்தார்.
 
யாழிற்கு வெள்ளிக்கிழமை வருகைதந்த அமைச்சர் குணரத்ன யாழ். மாவட்டத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேசங்கள் மற்றும் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டிய பிரசேதங்களைச் சென்று பார்வையிட்டார்.
 
அதனைத் தொடர்ந்து, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில், யாழ். மாவட்ட செயலகத்தில் யாழ். மாவட்ட மீள்குடியேற்றத் தரவுகளை ஆராய்ந்தார்.
அதன்போது கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
 
புள்ளி விபரங்களை பார்க்கும் போது, யாழ். மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையங்களை விரைவில் மூடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேவேளை, பலாலி விமான நிலைய அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்றத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
 
சுனாமியின் பின்னர் குடும்பங்களின் தொகை இரட்டிப்பு அடைந்துள்ளது. அதாவது, இடம்பெயர்ந்த குடும்பங்களில் உப குடும்பங்களும் உருவாகியுள்ளன. அதனால், மீள்குடியேற்றத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.
 
அத்துடன், இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் ஆகியோருடன் கலந்துரையாடிய பின்னர் எதிர்காலத்தில் தீர்மானங்கள் எடுக்கப்படுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
அதேவேளை, பலாலி விமானத்தளத்திற்கு அருகாமையிலுள்ள பொதுமக்களின் காணிகள் பற்றிய விபரங்களை சரியான முறையில் திரட்டித் தருமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் அவர் கோரிக்கை விடுத்தார்.
 
காணி விபரங்களை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்க வேண்டியுள்ளதால், திரட்டப்படும் விபரங்களை சரியான முறையில், சகல விடயங்களையும் உள்ளடக்கி திரட்டுமாறும் அரசாங்க அதிபரிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் 46 நலன்புரி நிலையங்கள் முன்னர் காணப்பட்டதுடன், இது வரைகாலமும் மேற்கொள்ளப்பட்ட மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் மூலம் அவற்றில் 12 நலன்புரி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
 
மிகுதி 34 நலன்புரி நிலையங்களிலும் இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

சமாதானத்தை பாதுகாக்க அனைவரும் இன,மத பேதங்கள் இன்றி ஒருமித்து முன்னேறிச் செல்ல வேண்டும் – ஹத்துருசிங்க!

Sunday,5th of January 2014
இனிவரும் காலங்களில் இன மத ரீதியில் பிணக்குகள் ஏற்படுமாயின் இலங்கையில் அது மாபெரும் அழிவை ஏற்படுத்தும் எனவே தற்போதைய சமாதானத்தை பாதுகாக்க அனைவரும் இன மத பேதங்கள் இன்றி ஒருமித்து முன்னேறிச் செல்ல வேண்டும் என யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.
 
கடந்த நான்கு ஆண்டுகளாக யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதியாக கடமையாற்றி வந்த ஹத்துருசிங்க 6ஆம் திகதியுடன் இராணுவ தலைப்பீடத்திற்கு மாற்றலாகி செல்லவுள்ளார்.
 
அதனையடுத்து வசாவிளானில் நேற்று இடம்பெற்ற பிரிவு உபசார விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதி எனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டேன். அந்தக் கால கட்டத்தின் சில மாதங்களுக்கு முன்னர் தான் யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. எனவே அந்த இக்கட்டான காலப்பகுதியில் பல்வேறு வழிகளிலும் மக்கள் விளைவுகளை சந்தித்திருந்தனர்.
 
எனவே அன்றைய கால கட்டத்தில் மக்களின் தேவைகளினை அறிந்து அதனை நிறைவேற்ற வேண்டிய தேவை எமக்கு இருந்தது. நான் பொறுப்பேற்ற பின்னர் மக்களது தேவைகளை அறிந்து அவர்களை அபிவிருத்திப்பாதையில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஒரு குறிக்கோளுடன் கடமையாற்றினேன்.
 
அதற்காக பொதுமக்கள் தொடர்பாடல் நிலையங்கள் அமைக்கப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஊடாக மக்களுக்கு தேவையான விடயங்களை வழங்கி வந்தோம். இதன்காரணத்தினாலேயே தான் என்னை உங்களுக்கும் உங்களை எனக்கும் நன்கு தெரிந்திருக்க வாய்ப்பாக அமைந்தது.
எனினும் இராணுவத்தினர் எதிரிகளுக்கு எதிராகவே போராடினர். தமிழ் மக்களுக்கு எதிராக அல்ல இருப்பினும் மக்கள் மத்தியில் தங்களை அழித்தவர்கள் இராணுவத்தினர் என்ற கருத்து காணப்பட்டது. இதனால் இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான உறவு நிர்கதியாகி இருந்தது. இருப்பினும் யாழ்.மாவட்ட மக்களுக்கு அவசியமாக இருக்கின்ற அபிவிருத்திகளை நாம் இராணுவத்தின் மூலம் வழங்கி நல்ல உறவினை கட்டியெழுப்பியுள்ளோம்.
 
மேலும் 2009 ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை மேற்கொள்ளப்பட்டு வந்த அபிவிருத்தியில் பல செயற்படுத்தப்பட்டது. அத்துடன் குற்றங்கள் மற்றும் தேவையற்ற செயற்பாடுகள் என அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்டு ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட நிர்வாக செயற்றிட்டம் தற்போது இங்கு காணப்படுகின்றது.
 
எனினும் இங்குள்ள மக்களுடைய கஷ்டங்களை நான் அறிவேன் எனவே கடந்த காலங்களில் ஏற்பட்ட விபரீதங்களை பார்த்து அவ்வாறு எதிர்வரும் காலங்களில் ஏற்படாத வகையில் இன மத குல பேதங்கள் எதுவும் இன்றி ஐக்கிய இலங்கைக்குள் நாம் வாழ அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் மதத்தலைவர்கள், வடக்கின் இராணுவ ஊடக இணைப்பாளர் மேஜர் மல்லவராட்சி, வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், மாநகர சபை உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந், மற்றும் பல இராணுவ உயரதிகாரிகள், ஊடகவியலாளர் எனப் பலரும் கலந்துகொண்டனர். அத்துடன், சாந்தன் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது.
 
இராணுவ தலைமையகத்தின் நிர்வாக நிறைவேற்று அதிகாரியாக இடமாற்றம் பெற்றும் செல்லும் மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க எதிர்வரும் 9ஆம் திகதி தனது கடமைகளை தலைமையகத்தில் ஏற்கவுள்ளதுடன், கிளிநொச்சி மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக செயற்பட்டுவரும் மேஜர் ஜெனரல் உதய பெரேரா, யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக அதே தினத்தில் தனது பதவியினை ஏற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மீனவர்கள் 59 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Saturday,4th of January 2014
இந்திய கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 59 பேரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு இந்திய நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
 
இந்தியாவின் இராமநாதபுரம் பிரதான நீதவான் நீதிமன்று இலங்கை மீனவர்களை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
 
இலங்கை மீனவர்கள் இரண்டாம்முறை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
 
கடந்த செப்டெம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்திய கடற்படை அதிகாரிகளினால் இலங்கை மீனவர்கள் 59 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

Friday, January 3, 2014

உலக இளைஞர் மாநாடு’ அடுத்த ஆண்டு கொழும்பில்!

Saturday,4th of January 2014
அடுத்த ஆண்டு மே மாதம் கொழும்பில் ‘உலக இளைஞர் மாநாடு’ நடைபெறவுள்ளதால் 2014ஆம் ஆண்டு இலங்கை இளைஞர்கள் அபிவிருத்தியில் முக்கியமானதாக இருக்குமென தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி லலித் பியும் பெரேரா தெரிவித்தார்.
 
இளைஞர்கள் தொடர்பில் இலங்கையினால் மேற்கொள்ளப்படும் வரவேற்கத்தக்க முயற்சிகள் காரணமாக இலங்கை ஒரு சிறந்த நாடு என்ற சமிக்கையினை வெளிப்டுத்துகின்றதென அவர் தெரிவித்தார். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் இளைஞர் அபிவிருத்தி என்பது சமூக நலன் என்ற மனோபாவத்துடன் பேசப்பட்டது எனத் தெரிவித்த அவர் தேசத்தை கட்டியெழுப்பும் பணிக்கு இணையாக அரசாங்கத்தினால் இந்த மனோபாவத்தை மாற்ற முடியும் எனவும் தெரிவித்தார். ‘அபிவிருத்தியின் முக்கியத்துவம் மிக்க பிரிவினராக இளைஞர் உள்ளனர்’ என்ற மனோநிலை நாடு முழுவதும் வியாபிக்கச் செய்யப்பட்டுள்ளது என பெரேரா தெரிவித்தார்.
 
கடந்த சில ஆண்டுகளாக இளைஞர்கள் தொடர்பான நிகழ்ச்சி நிரல் சர்வதேச ரீதியான நற்பெயரை பெற்று குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் அடைந்துள்ளது எனக் குறிப்பிட்டார். ஐ.நா. பொது செயலாளர் பான் கி மூன் அவர்கள் 2012 இல் வெளியிடப்பட்ட ‘உலக இளைஞர் அபிவிருத்தி’ தொடர்பில் சமர்ப்பித்த பத்திரத்தில் இலங்கை பற்றி 14 தடவைகள் குறிப்பிட்டிருந்தமையானது இலங்கை எவ்வளவு தூரம் முன்னேற்றம் கண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது என பெரேரா தெரிவித்தார்.
 
உள்கட்டமைப்பு மற்றும் இளைஞர் திறன் ஆகியவற்றை பற்றாக்குறை எதுவுமின்றி நாடு கொண்டிருப்பதன் காரணமாக உலக அளவிலான எந்த ஒரு நிகழ்வையும் நடத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் அவர் தெரிவித்தார். சர்வதேச அரங்கில் இளைஞர் தொடர்பில் பேசப்படும்போது போது இலங்கை பற்றியும் பேசப்படும் நிலை விரைவில் உருவாகும் என அவர் குறிப்பிடப்டார். நவம்பர் மாதம் பொதுநலவாய இளைஞர் மாநாட்டை நடத்திய அனுபவத்துடனும் மாநாடு ஒன்றினை ஏற்பாடு செய்யும் ஆற்றலுடனும் உலக இளைஞர் மாநாட்டினை மே மாதம் 6ஆந் திகதி தொடக்கம் 9ஆந் திகதி வரை பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடாத்துவதற்கு ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இந்த மாநாடு ’2016இற்கு பின்னர் மிலேனியம் அபிவிருத்தி’ என்ற தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளது.
இம் மாநாட்டில் 1,500 வெளிநாட்டு இளைஞர்கள் பிரதிநிதிகளும் 100 உள்ளூர் இளைஞர்கள் பிரதிநிதிகளும் பங்கேற்கபர் என எதிர்பார்க்கப்படுவதாக தவிசாளர்; தெரிவித்தார்.
 
ஏற்பாட்டுக்குழுவிற்கு இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் இணைத் தலைமை வகிப்பதாக தவிசாளர் தெரிவித்தார். பல்வேறு பணிகளை கவனிக்கவென 22 துணை குழுக்கள் காணப்படுகின்றன. அதேவேளை தொனிப்பொருள் மற்றும் நிகழ்ச்சி நிரல்களை வடிவமைப்பதற்காக 10 உள்ளுர் உறுப்பினர்களை உள்ளடக்கிய 20 உறுப்பினர்களை கொண்ட இளைஞர் படையணி ஒன்றும் உள்ளது.
மாநாட்டிற்கு இணைவானதாக பல்வேறு தொடர் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்த அவர் மாநாட்டுடனும் அதனுடன் இணைந்த நிகழ்வுகளுடனும் சுமார் 10,000 இலங்கை இளைஞர்களை தொடர்புபடுத்துவதே எமது எதிர்பார்ப்பாகும். இலச்சினையொன்றை வடிவமைப்பதற்கான போட்டியொன்று ஆரம்பமாகியுள்ளது. இது ஜனவரி மாதம் 31ஆந் திகதி முடிவடையும். ஆர்வமுள்ளோர் தமது ஆக்கங்களை இணையத்தளம் மூலமாக சமர்ப்பிக்க முடியும். மாநாட்டிற்கு இணைவானதாக இளைஞர் அபிவிருத்தி தொடர்பான கண்காட்சி, கலாச்சார நிகழ்வு மற்றும் பொது நிகழ்வு ஆகியன இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

மக்களுடைய காணிகள் மக்களிடமே கையளிக்கப்பட வேண்டும்- சந்திரகுமார் எம்.பி!

Saturday,4th of January 2014
மக்களுடைய காணிகள் மக்களிடமே கையளிக்கப்பட வேண்டும். மக்களுடைய காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
 
கோப்பாய் அச்சுவேலி அக்கரைக் கிராமத்தில் இடம்பெற்ற வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலையே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
இங்கு நீண்ட காலமாக இடம்பெயர்ந்திருக்கின்ற மக்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர். அதேவளையில், இவ்வாறு இடம்பெயர்ந்திருக்கின்ற மக்கள் குறிப்பிட்டளவானோர் மீளக் குடியமர்த்தப் பட்டிருக்கின்ற நிலையில், தற்போதும் குறிப்பிட்டளவானோர் முகாம்களிலும் நண்பர், உறவினர் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு இடம்பெயர்ந்திருக்கின்ற மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
 
இந்நிலையில், இடம்பெயர்ந்திருக்கின்ற மக்கள் சொந்த இடங்களில் தான் குடியமர்த்தப்பட வேண்டுமென்பதால் எந்த வித மாற்றுக் கருத்துக்களும் இல்லை. இவ்வாறு குடியமர்த்தப்படுகின்ற மக்களுக்கு அடிப்படை வாழ்வாதார உதவிகளை ஏற்படுத்திக் கொடுத்து அதனை வழங்குவது எமது பொறுப்பாகும்.
 
யுத்தத்திற்குப் பின்னரான வடபகுதியில் அபிவிருத்தியிலும், வாழ்வாதார ரீதியிலும் அதிகளவில் மேம்பாடு காணப்பட்டுள்ளது. ஆயினும், இதனைக் குழப்புவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். அதாவது, மக்கள் மத்தியில் மீண்டும் பதற்றமான நிலையை ஏற்படுத்தி, அவர்களை மீளவும் அழிவுப்பாதைக்கு கொண்டு செல்வதற்கே என்றும் சாடியுள்ளார்.
 
இவ்வாறு மக்களைக் குழப்பி, தீவிர உணர்ச்சிவசப்பட்ட கருத்துக்களைத் தெரிவித்துவிட்டு, மக்கள் பாதிக்கப்படுகின்ற போது அல்லது அழிவை நோக்கிச் செல்கின்றபோது மக்களை நடுத்தெருவில் விட்டு விட்டு ஓடிவிடுவார்கள். ஆனால், நாம் மக்களுடன் மக்களாகவே இருந்து வருகிறோம்.
 
ஆகவே, சமகாலத்தில் எமது சம உரிமையைப் பெற்று நாம் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் வாழ வேண்டும். எமது சொந்த நிலத்தில் நாம் சென்று வாழ்வது எமது வாழ்வுரிமை. அந்த வாழ்வுரிமை எமக்குக் கிடைக்க வேண்டும். அதாவது, சொந்த மண்ணில், சொந்தக் கிராமத்தில் வாழ்வது தான் உண்மையான சமாதானத்தின் வெற்றியாகும் என்றார்.
 
ஆகவே, இராணுவத்தினர் வைத்திருக்கின்ற பொது மக்களுடைய காணிகள்
அவர்களிடமே கையளிக்கப்பட வேண்டுமென்றும் இடம்பெயர்ந்திருக்கின்றவர்கள் அவர்களுடைய சொந்த நிலங்களிலேயே குடியமர்த்தப்பட வேண்டுமென்றும் கோரினார்.

இராணுவத்தினரை வெளியேற்றிவிட்டு மக்களை மீள்குடியமர்த்துவதற்கான அதிகாரம் தன்னிடம் இல்லை- மீள்குடியேற்ற அமைச்சர்!

Saturday,4th of January 2014
இராணுவம் கையகப்படுத்தி வைத்திருக்கின்ற காணிகளிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றிவிட்டு மக்களை மீள்குடியமர்த்துவதற்கான அதிகாரம் தன்னிடம் இல்லை என்றும், தன்னால் முடியாதென்றும் யாழில் இடம்பெற்ற மீள்குடியமர்வு கூட்டத்தில் மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ண வீரக்கோன்.
இதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கே இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அமைச்சர் வீரக்கோன், இங்குள்ள காணிப் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பித்து அவருடன் கலந்துரையாடியே தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள முடியுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
யாழ். மாவட்டத்தின் மீள்குடியேற்றம் தொடர்பான விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகம் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ண வீரக்கோன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார் மற்றும் சில்வெஸ்டர் அலென்டின் பிரதேச செயயலர்கள் மீள்குடியேயற்ற அமைச்சின் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
 
இந்தக் கலந்துரையாடலின் போது மாவட்டத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டிய பிரதேசங்கள் மற்றும் இராணுவத்தினரால் கையகப்படுத்தி வைத்திருக்கின்ற பொதுமக்களுடைய நிலங்கள் மற்றும் குடியமர்த்தப்பட்ட மக்களுடைய அடிப்படைத் தேவைகள் என்பன தொடர்பாக ஆராயப்பட்டது.
யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டு பல்வேறு இடங்களிற்கும் சென்றுள்ளதோடு, மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார உதவிகளையும் வழங்கி வந்திருக்கின்றேன். அத்தோடு மீள்குடியேற்றப்பட வேண்டிய மக்கள் தொடர்பாகவும் கலந்துரையாடியிருப்பதுடன், அப்பகுதிகளையும் பார்வையிட்டிருக்கின்றேன் என அமைச்சர் வீரக்கோன் தெரிவித்தார்.
 
இந்நிலையில், நலன்புரி நிலையங்களிலுள்ள மக்களுடைய அடிப்படைத் தேவைகள் மற்றும் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டிய மக்கள் தொடர்பாகவும், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்ற நிலங்கள் தொடர்பாகவும் இதனை விடுவக்கப்பட வேண்டிய அவசியம் குறித்தும் அமைச்சரிடம் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
 
இங்கு இரானுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருக்கின்ற நிலங்களை என்னால் விடுவிக்க முடியாது. இதற்கான அதிகாரமும் என்னிடம் இல்லை. ஆகவே, இங்குள்ள நிலைமைகள் தொடர்பாக அமைச்சரவைக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவே என்னால் முடியும்.
 
இதனை விடுத்து தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் என்னிடம் இல்லை. இருந்தும் இங்குள்ள பிரச்சினைகள் மற்றும் நிலைமைகள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியுடன் பேசி ஜனாதிபதியே இறுதி தீர்வுக்கான முடிவை எடுக்க முடியும். இதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

புரிந்துணர்வை ஊக்குவிக்கும் வகையில் அமெ­ரிக்கத் தூத­ர­கத்தின் சமூக ஊடக பட்­டறை!

ss321Friday,3rd of January 2014

சமூக ஊடக பட்டறை எனும் புதிய நிகழ்ச்சித்திட்டத்தை இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது . சமூக ஊடக பட்டறை கொழும்பிலுள்ள அமெரிக்க நிலையத்தில் நடைபெறவுள்ளதுடன் இங்கு ஆரம்பநிலை இடைநிலை மற்றும் உயர்நிலை சமூக ஊடக பயிற்சி நெறிகளை முற்றிலும் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் . ஜனவரி 2 ஆம் திகதி முதல் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் .

கடந்த சில வருட காலப்பகுதியில் நாம் குறிப்பிடத்தக்களவு சமூக ஊடக பயிற்சிகளை நடத்தியுள்ளோம் . மக்களுக்கு சமூக ஊடகத்தின் சிறப்பம்சங்களை கற்றுத்தருவதற்காக இந்த பயிற்சிகளை நாம் நெறிப்படுத்த விரும்புகின்றோம் என அமெரிக்க நிலையத்தின் பணிப்பாளர் கிறிஸ்டோபர் ரீல் தெரிவித்தார் .

இலங்கையர்கள் மத்தியில் சமூக ஊடகம் தொடர்பாக மேம்பட்ட புரிந்துணர்வை ஏற்படுத்துவதுடன் இணையத்தில் மிகவும் சிறப்பான முறையில் மக்கள் செயற்பட ஊக்குவிப்பதே சமூக ஊடக பட்டறையின் மூலம் நாம் அடைய எத்தனிக்கும் பிரதான நோக்கமாகும் . இந்த சமூக ஊடக பயிற்சி நெறிக்காக எவரேனும் ஜனவரி மாதம் 2 ஆம் திகதி முதல் 17 ம்திகதி வரையான காலப்பகுதியில் அமெரிக்க தூதரக இணையத்தளத்தினூடாக

http://goo.gl/1Es2sW விண்ணப்பிக்க முடியும் . இதற்காக எவ்வித கட்டணமும் அறவிடப்படமாட்டாது . விண்ணப்பங்கள் முதலில் கிடைக்கும் ஒழுங்கில் ஜனவரி மாத நடுப்பகுதியில் விண்ணப்பதாரிகளுக்கு எதிர்வரும் பயிற்சிகள் தொடர்பான திகதி மற்றும் நேரங்கள் அறியத்தரப்படும் . http://srilanka.usembassy.gov/sm_lab.html என்ற முகவரியின் ஊடாக மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என்று அமெ ரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளத

Thursday, January 2, 2014

தேர்தல்கள் ஆணையாளருக்கும், கட்சி தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கிடையில் இன்று விசேட சந்திப்பு!

Friday,3rd of January 2014
தேர்தல்கள் ஆணையாளருக்கும், கட்சி தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்குமிடையில் இன்றைய தினம் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. மாகாணசபைத் தேர்தல் வாக்காளர் இடாப்பு குறித்து ஆராய்வதே இதன் பிரதான
நோக்கமாகும்.
 
இந்நிலையில் இவ்வருடம் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலானது, 2013 ம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின்படியே நடைபெறவுள்ளது. இது தொடர்பில் ஆராயும் பொருட்டு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்றைய தினம் சகல அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் செயலாளர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இதேவேளை 2013 ம் ஆண்டு வாக்காளர் இடாப்பு தயாரிக்கும் பணி நிறைவுசெய்யப்பட்டுள்ளது.
 
அதில் தமது பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதை மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலும், கிராம சேகவர் அலுவலகங்களிலும் மக்கள் பரீட்சிக்க முடியுமென மேலதிக தேர்தல் ஆணையாளர் எல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை மாவட்ட மட்டத்திலான வாக்காளர் இடாப்பு விபரங்கள் தற்போது திரட்டப்பட்டு வருகின்றன. அதற்கயை அடுத்த வருடம் முழுமையான விபரம் வெளியிடப்படவுள்ளது.
 
 இந்நிலையில் சில மாவட்டங்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படலாமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விரைவில் மேல் மற்றும் தென் மாகாணசபைகள் கலைக்கப்பட்டு, தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

காணாமற்போனவர்கள் தொடர்பில் புலம்பெயர் உறவுகள் முறையிடலாம். ஜனாதிபதி ஆணைக்குழுவின் - தலைவர் பரணகம!

Friday,3rd of January 2014
காணாமற்போனோர் தொடர்பாக புலம்பெயர் தமிழர்கள் முறைப்பாடுகளைத்
தெரிவிக்க இந்தமாத நடுப்பகுதியில் விசேட இணையத்தளம் ஒன்று உத்தியோக பூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது என காணாமற் போனோரைக் கண்டறிவதற்கான ஜனாதிபதியின் ஆணைக்குழுவின் தலைவர் பரணகம தெரிவித்தார் .
 அத்தோடு , இம்மாத இறுதிக்குள் வடக்கு , கிழக்கு போன்ற பகுதிகளுக்கு நேரடியாக பயணத்தை மேற்கொண்டு தகவல் திரட்டப்படவுள்ளதாகவும் , காணாமற்போனோரது உறவினர்களுக்கு நஷ்டஈடு வழங்க ஏற்பாடு செய்யப்படவுள்ளதாகவும் அவர் நேற்றுத் தெரிவித்தார் .
 அவர் மேலும் தெரிவிக்கையில் ,
 ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவிற்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்துக் கொண்டு வருகின்றன . முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளும் திகதி இன்றுடன் ( நேற்றுடன் ) முடிவடைந்தாலும் இனி வரும் காலங்களில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளையும் நாம் நிராகரிக்க மாட்டோம் . அவை தொடர்பிலும் நாம் ஆராய்வோம் .
 இதுவரையிலும் 11 ஆயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன . இப்போதே இவை தொடர்பில் சுயாதீன விசாரணைகளை நாம் ஆரம்பித்து விட்டோம் .
 அத்தோடு , ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இரு தடவைகள் காணாமற்போனோரின் உறவினர்களை நேரடியாக சந்தித்து கலந்துரையாடி தகவல்களைப் பெறவுள்ளோம் .
 அதுமட்டுமன்றி , புலம்பெயர் தமிழர்களும் முறைப்பாடுகளைத் தெரிவிக்க விசேட ஏற்பாடுகளை செய்யவுள்ளோம் . அதாவது , ஜனவரி மாத நடுப்பகுதியில் இணையத்தளம் ஒன்றை உத்தியோகப் பூர்வமாகத் திறந்து வைக்கவுள்ளோம் .
இதன் மூலம் இலகுவாகவும் , விரைவாக தகவல்களை பெறமுடிவதோடு பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் .
அத்துடன் , வடக்கு , கிழக்கு ஆகிய பகுதிகளுக்கும் இம்மாதத்திலிருந்து தொடர் பயணங்களை மேற்கொண்டு தகவல்களைத் திரட்டவுள்ளதுடன் உறவினர்களுக்கு நஷ்டஈடு வழங்கவும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது " என்றார் .

இலங்கை காவல்துறை மீது மனித உரிமைகள் குழுவிடம் புகார்!

ss254Friday,3rd of January 2014
உரிமைகள் தினமன்று தாம் நடத்திய கவனஈர்ப்பு போராட்டத்தின் போது காவல்துறை பக்கசார்பாக நடந்துகொண்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் வியாழனன்று முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர் .
 
சர்வதேச மனிதஉரிமைகள் தினமான டிசம்பர் 10 ம் தேதி திருகோணமலையில் காணாமல் போனோரை தேடி கண்டறியும் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது சிங்கள மொழியில் பேசிய குழுவொன்றினால் தாக்குதல் நடத்தப்பட்டது .
 
இந்த தாக்குதலில் காணாமல் போனோரைத் தேடி கண்டறியும் குழுவின் தலைவரான சுந்தரம் மகேந்திரன் உட்பட சிலர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சையும் பெற்றிருந்தனர் .
 
இந்த சம்பவம் தொடர்பாக காணாமல் போனோரை தேடி கண்டறியும் குழுவினால் இன்று தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவில் திருகோணமலை காவல்துறைக்கு எதிராக செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் அங்கு கடமையிலிருந்த காவல்துறை பாராமுகமாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது .
 
இது தொடர்பாக பிபிசி தமிழோசையுடன் பேசிய காணால் போனோரை தேடி கண்டறியும் குழுவின் தலைவரான சுந்தரம் மகேந்திரன் திருகோணமலை காவல் நிலையத்திற்கு முறைப்பாடு பதிவு செய்வதற்காக சென்றிருந்தபோது தாம் அச்சுறுத்தப்பட்டதாக தெரிவித்தார் . தமிழ் மக்களை ஓன்றிணைத்து சிங்கள மக்களுக்கு எதிராக இனவாதத்தை தூண்டி பிரச்சினைகளை ஏற்படுத்த தாம் முற்படுவதாக நீதிமன்றத்தில் தம் மீது வழக்கு தொடரப்படும் என்றும் வேண்டுமானால் நீதிமன்றத்தில் சந்திக்கலாம் என்றும் கூறி காவல்நிலைய பொறுப்பதிகாரி தம்மை அச்சுறுத்தியதாக தெரிவித்தார்
 
கடந்த 20 ஆம் தேதி காவல்துறை மா அதிபதி காரியாலயத்தில் காவல்துறை பக்க சார்பாக நடந்து கொண்டமை மற்றும் தனக்கு விடுத்த அச்சுறுத்தல் தொடர்பான முறைப்பாட்டை தாம் செய்தபோதிலும் அதன்மீது இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் , அதன் காரணமாகவே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் இன்று முறைப்பாடு செய்ததாகவும் அவர் கூறினார் .
 
சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் நடைபெற்ற தம்முடைய போராட்டத்தில் தங்கள் மீது தொடரப்பட்ட வன்முறைகளுடன் தொடர்பானவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்றும் காவல்துறை பக்க சார்பாக நடந்து கொண்டமை தொடர்பாக விசாரணை நடைபெற வேண்டும் என்றும் இதுவே தமது கோரிக்கை என்றும் அவர் குறிப்பிட்டார் .
 
தமது எழுத்து மூல மனுவை பெற்றுக் கொண்ட இலங்கை மனித உரிமைகள் ஆணையகத்தின் அதிகாரிகள் , இரு தரப்பையும் பிறிதொரு நாளில் அழைத்து இது தொடர்பான விசாரணையை நடத்துவோம் என்று தம்மிடம் தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறினார் .

வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்தவே கனடிய எம்.பி ராதிகா இலங்கை வருகை!

Friday,3rd of January 2014
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனுக்கு இங்குள்ள தமிழர்களைப் பற்றி எவ்வித அக்கறையோ கவலையோ இல்லை. அவர் வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் வாழ் தமிழர்களை திருப்திப்படுத்துவதற்காகவே இங்கு வந்து நடிக்கிறாரென பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா நேற்று தினகரனுக்குத் தெரிவித்தார்.

இந்நிலையில் கனேடிய எம்.பி. ராதிகா இலங்கை பற்றி ஒரு அறிக்கையை பகிரங்கப்படுத்தினால் அது நிச்சயமாக நாட்டுக்கு எதிரானதாகவே அமையும் என்பதனால் அத்தகைய ஒருதலைப்பட்சமான கருத்துக்கள் சர்வதேச அரங்கில் எடுபடாது எனவும் அவர் கூறினார்.

ராதிகா சிற்சபேச னின் இலங்கை விஜயம் குறித்து பிரதி வெளிவிவகார அமைச்சரிடம் கருத்துக் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். கனடாவில் உள்ள இலங்கைத் தமிழர்களின் வாக்குப் பலத்தின் மூலமே இந்தப் பெண்மணி கனடிய பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆகவேதான் தமது வாக்காளர்களைத் திருப்தி செய்வதற்காக இவர் சுற்றுலா விஸாவில் இலங்கை வந்து இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுகிறார் என்றும் பிரதியமைச்சர் கூறினர்.

இலங்கையில் உள்ள அகதி முகாம்களின் ஒழிவு மறைவற்ற செயற்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பும் இந்த கனடிய பாராளுமன்ற உறுப்பினர் இலங்கை அரசாங்கத்திடம் அதைப்பற்றி கேட்பதற்கு பதில் தமிழ் மக்களை அகதிகளாக்கிய எல்.ரி.ரி.ஈ யிடமே இதற்கான விளக்கத்தை கேட்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ராதிக சிற்சபேசனின் இலங்கை விஜயம் குறித்து நாம் மகிழ்ச்சி அடைகிறோம் என்று தெரிவித்த பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா இலங்கையில் தான் விரும்பிய இடம் எல்லாம் சென்று பார்ப்பதற்கு இவருக்கு அரசாங்கம் இடம் அளித்துள்ள போதிலும் இந்தப் பெண்மணி இனவாதப் போக்கில் செயற்படுவது வேதனை அளிக்கிறது என்றும் பிரதியமைச்சர் நியோமல் சுட்டிக்காட்டினார்.

ஜனநாயக சுதந்திரம் இலங்கையிலும் கனடாவிலும் கடைப்பிடிக்கப்படுகின்ற போதிலும் ராதிகா சிற்சபேசன் போன்ற கனடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்கள் நாட்டில் ஜனநாயக செயற்பாடுகளை சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கிறார்கள். இவ்விரு நாடுகளிலும் ஜனநாயக சுதந்திரம் இருக்கின்ற போதிலும் இவ்விரு நாடுகளின் அரசாங்க நிர்வாக அமைப்பில் பாரிய மாற்றங்கள் இருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கையை பொறுத்தமட்டில் அரசியல் மற்றும் தேர்தல் நடவடிக்கைகள் ஒழிவு மறைவற்ற முறையில் நடதப்படுகிறது என்று தெரிவித்த பிரதி அமைச்சர் கனடாவில் வாக்காளர் தங்கள் மீது நம்பிக்கை வைக்கக்கூடிய முறையில் அரசியல்வாதிகள் நடந்து கொண்டு மக்களின் வாக்குகளைத் திருடுகிறார்கள் என்று கூறினார்.

ராதிகா சிற்சபேசன் திறந்த மனதுடன் இந்த விஜயத்தை இலங்கைக்கு மேற்கொள்ளவில்லை. அவர் ஏதோ ஒரு குறிக்கோளை அடிப்டையாக வைத்தே இங்கு வந்து எங்கள் நாட்டின் குறைபாடுகளை கண்டுபிடிப்பதிலேயே ஆர்வம் காட்டுகிறார். எவ்வாறாயினும் இவர் இலங்கைக்கெதிராக கூறும் கருத்துக்கள் பக்கச்சார்புடையவை. ஆதலினால் இவை சர்வதேச அரங்கில் செல்லுபடியாகாது என்றும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளையில் ராதிகா சிற்சபேசன் யாழ்ப்பாணத்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார் என்று பரவி வரும் வதந்தியில் எவ்வித உண்மையும் இல்லை என்று பிரதி பொலிஸ் மா அதிபர் ரோஷான் டயஸ் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார்.

இந்தப் பெண்மணி யாழ்ப்பாணத்தில் சுதந்திரமாக நடமாடுவதுடன் தான் விரும்பிய அனைவரையும் சந்தித்துப் போசுவதற்கு நாம் தடைசெய்யவில்லை என்று அவர் கூறினார்.

Wednesday, January 1, 2014

ராதிகா சிற்சபேசன் வடக்கே பலதரப்பினரை சந்தித்து பிரச்சினைகளை சர்வதேசத்தின் பார்வைக்கு கொண்டு செல்வதாக உறுதியளிப்பு!

Thursday.2nd of January 2014
இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வந்துள்ள தமிழரான கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் வடக்கே பலதரப்பினரை சந்தித்து பேசியுள்ளார்.
 
போரினால் பாதிக்கப்பட்டவர்கள், காணாமல் போயுள்ளோரின் குடும்பங்கள் உட்பட பலரை சந்தித்துள்ள அவர், அம்மக்களின் பிரச்சினைகள் கனடா அரசு மற்றும் இதர சர்வதேச சமூகத்தின் பார்வைக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார் என்று அவரை சந்தித்தவர்கள் கூறுகிறார்கள்.
 
மன்னார்ப் பகுதியில் காணாமல் போனவர்களின் பெற்றோர்களை ராதிகா சந்தித்து பேசவும் தா
ங்கள் ஏற்பாடுகளை செய்து
கொடுத்ததாக பிபிசி தமிழோசையிடம் கூறினார் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் பங்குத் தந்தை இமானுவேல் ஜெபமாலை.
 
இலங்கையில் யுத்தம் முடிந்து பல ஆண்டுகளாகியும் இன்னும் எந்தத் தீர்வும் கிட்டவில்லை, உள்நாட்டில் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பாக்க முடியாது என அவரிடம் தாங்கள் தெரிவித்ததாகவும் ஜெபமாலை கூறினார்.
 
ராதிகா சிற்சபேசன் போன்றோர் இலங்கையிலுள்ள பிரச்சினைகளை சர்வதேச சமூகத்துக்கு கொண்டு சென்று அதன் மூலம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தாங்கள் கோரியதாகவும் அவர் மேலும் கூறினார்.
 
கனடா கடந்த ஆண்டு இலங்கையில் நடைபெற்ற கொமன்வெல்த் கூட்டம் தொடர்பில் எடுத்த நிலைப்பாட்டுக்கு தங்களைப் போன்றோர் கொடுத்த அழுத்தமும் ஒரு காரணம் என ராதிகா கூறியதாகவும் பங்குத் தந்தை ஜெபமாலை தெரிவித்தார்.
 
தான் கனடாவுக்குத் திரும்பிச் சென்ற பிறகு அங்குள்ள அரசுக்கு மீண்டும் இலங்கை விஷயம் குறித்து அழுத்தம் கொடுப்பதாக உறுதியளித்துள்ளார் என்றும் அவர் கூறினார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களே ராதிகா சிற்சபேசனை மன்னார் பகுதிக்கு அழைத்து வந்தார் எனக் கூறும் ஜெபமாலை அவர்கள், அவரது பயணத்தின் போது பாதுகாப்புத் தரப்பிலிருந்து எந்த கண்காணிப்போ அல்லது இடைஞ்சல்களோ ஏற்படவில்லை என்றும் பங்குத் தந்தை ஜெபமாலை கூறினார்.

இரணைமடு சந்திக்கருகில் தனியார் பஸ் மீது கல் வீச்சு!

ss1111st-january,2014
இரணைமடு சந்திக்கருகில் இனந்தெரியாத சிலரின் கல்வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது .
 
இந்த சம்பவம் நேற்று பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது .
 
வவுனியா தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தில் பதிவுசெய்யப்பட்ட தனியார் பஸ் ஒன்று பரந்தன் , புதுக்குடியிருப்பு ஊடாக முல்லைத்தீவிற்கான சேவையை இன்றும் மேற்கொண்டிருந்தது .
 
இதன்போது இரணைமடு சந்தியை அண்மித்த பகுதியில் இனந்தெரியாத நபர்களால் தனியார் பஸ்ஸின் மீது கல்வீச்சு மேற்கொண்டிருந்தது .
 
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தம்மீது கற்பிரயோகம் மேற்கொண்டதாக பஸ்ஸின் சாரதி குறிப்பிடுகின்றார் .

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபேசன் வீட்டுக்காவலில்: இலங்கை மறுப்பு!

1st-january,2014
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபேசன் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை இலங்கை மறுத்துள்ளது. அவர், தன்னுடைய நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தான் விரும்பிய இடங்களுக்கு சென்றுவருகின்றார் என்றும் தெரிவித்துள்ளது.

அவரை வீட்டுக்காவலில் வைப்பதற்கு பொலிஸாருக்கோ அல்லது இராணுவத்தினருக்கோ எவ்விதமான அதிகாரங்களும் இல்லை என்று யாழ்.பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஹான் டயஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வமற்ற விஜயமொன்றை மேற்கொண்டுள்ள  கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.;

விசேட பிரமுகர்களின் மேடை சரிந்ததில் பலருக்கு காயம்!

1st-january,2014
கொழும்பு ஹில்டன் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் விசேட பிரமுகர்களின் மேடை சரிந்து விழுந்ததுள்ளமையினால் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தினால் ஹோட்டல் வளாகத்தில் எல்லா இடங்களிலும் இரத்தம் சிந்திக்கிடந்தது.

நேற்றிரவு நடத்தப்பட்ட புதுவருட விருந்துபசாரத்தின் போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் மகனும் இன்னும் பல முக்கியஸ்தர்களும் அமர்ந்திருந்த மேடையே இவ்வாறு பொறிந்து வீழ்ந்துள்ளது.

இதனால் கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்த பலர் காயமடைந்தனர். இந் மேடையில் சுமார் 200 பேர் வரையிலும் இருந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

‘முழு மேடையும் பொறிந்து விழுந்ததனால் எல்லா இடமும் இரத்தம் சிந்திக்கிடந்தது. நாம் அம்புலன்ஸ் இல்லாத நிலையில் காயப்பட்டவர்களை எமது வாகனத்தில் அவசரமாக ஏற்றிச்சென்றோம்’ என சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்தார்.

இந்த இடம் கேளிக்கை விரும்பிகளுக்கு மிகவும் விருப்பமான இடமாக இருந்தது. எனினும் ,இந்த  சம்பவம் பற்றி கருத்துக்கூற ஹில்டன் மறுத்துவிட்டது.

இந்த சம்பவத்துக்கு நாம் பொறுப்பேற்றுள்ளோம். மேடை அமைப்பு வேலை ஒப்பந்த அடிப்படையில் வேறு ஒரு தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும் நாமே இதற்கு பொறுப்பேற்கின்றோம் என இந்த நிகழ்வின் ஒழுங்கமைப்புக்கு பொறுப்பான பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

விருந்துபசாரத்தில் கலந்துகொள்வதற்காக சென்ற பலரும் ஹில்டன் ஹோட்டலையும் விருந்து ஏற்பாட்டாளர் கன்ரலோப் பிளே கிறவுண்டையும் குற்றங் கூறினர்.காயப்பட்டவர்களுக்கு உதவுவதை விடவும் உடைக்கப்படாத மதுபான போத்தல்களை சேகரிப்பதே அவர்களுக்கு முக்கியமானதாக இருந்தது’ என இந்த நிகழ்வுக்கு பொறுப்பானவர்களில் ஒருவர் தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.

ஏற்பாட்டாளர்கள் காயப்பட்டவர்களை கவனிக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் வருந்திக்கொண்டிருந்த போது அவர்கள், கேளிக்கையை தொடர்வதிலேயே அக்கறையாக இருந்தனர் என இன்னொருவர் கூறியிருந்தார்.

எங்கும் இரத்தம் காணப்பட்டது. மக்கள் உதவி கேட்டு கதறினர். எனது நண்பிக்கு கணுக்கால் உடைந்துவிட்டது. இன்னொருவருக்கு உடலில் எரிகாயம் காணப்பட்டது.

கை,கால்,நெஞ்செலும்பு உடைந்தவர்களாலும் கண்ணாடி வெட்டுக்காயங்களுடன் காணப்பட்டவர்களினாலும் நவலோக்க வைத்தியசாலை நிரம்பி வழிந்தது  என முகப்புத்தகத்தில் கூறப்பட்டிருந்தது.
 
 
 
 
 

Monday, December 30, 2013

தேர்தல்கள் செயலகத்தின் புதிய தீர்மானம்!

31st of December 2013
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் விருப்பு வாக்கு எண்ணும் மத்திய நிலையத்திற்குள் வேட்பாளர்களை அனுமதிப்பது குறித்து தேர்தல்கள் செயலகம் கவனம் செலுத்தியுள்ளது.
 
எதிர்வரும் மேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தலில் இந்த முறை கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கட்சியின் வாக்கு எண்ணி முடிக்கப்பட்ட பின் விருப்பு வாக்கு எண்ணும் தருணத்தில் வேட்பாளரை உள் அனுமதிக்க தேர்தல்கள் செயலகம் தீர்மானித்துள்ளது.
 
தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் இவ்வாய்ப்பு வழங்கப்பட மாட்டதெனவும் வெற்றிபெறும் கட்சியின் வேட்பாளர்களுக்கு மாத்திரமே வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன் அடிப்படையில் அடுத்த தேர்தலில் வாக்கு எண்ணும் மத்திய நிலையத்தின் தொகை அதிகரிக்கப்படவுள்ளது.
 
இதற்கு முன்னர் ஐந்து பேர் கொண்ட குழுவிற்கு மாத்திரமே விருப்பு வாக்கு எண்ணும் மத்திய நிலையத்திற்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை, அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளை எதிர்வரும் வெள்ளிக்கிழமை 3ம் திகதி சந்திக்க தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அழைப்பு விடுத்துள்ளார்.
 
எதிர்வரும் மாகாண சபை தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான இந்த சந்திப்பு சாதாரண சந்திப்பாகவே அமையும் என்று தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.

தமிழ்-முஸ்லிம் மக்களிடையில் இன முரண்பாட்டை ஏற்படுத்த மறைமுக சதி - ரவூப் ஹக்கீம்!

31st of December 2013
கல்முனை மாநகர சபை வரவு செலவு திட்டத்தை இன்று (31) செவ்வாய்க்கிழமை நிறைவேற்றுவதற்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவதாக கல்முனை மாநகர சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் உறுதி அளித்துள்ளனர்.
 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் முன்னிலையில் அவர்கள் உறுதியளித்தனர்.
 
30-12-2013  திங்கட்கிழமை மாலை 5 மணி தொடக்கம் இரவு 8 மணிவரை நிந்தவூரிலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.எம்.ஹசனலியின் இல்லத்தில் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இவ்வாறு உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
 
கட்சி தலைவரின் வேண்டுகோளின்படி தங்களுக்கான முரண்பாடுகளை கலைவதற்கும் ஒற்றுமையாக செயற்படுவதற்கும் கல்முனை மாநகர சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் இணக்கம் தெரிவித்தனர்.
 
இக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் உரையாற்றுகையில்,
 
அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தளம் கல்முனை
என கூறிவிட்டதோடு அதனை உடைக்க பல சக்திகள் மறைமுகமாக செயற்பட்டுக்கொண்டு இருக்கின்றன. இந்த சதித் திட்டத்திற்கு ஆளாகாமல் நாங்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டி இருக்கிறது. தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இன முரண்பாடுகளை தோற்றுவிப்பதற்கான முயற்ச்சிகளும் தற்போது கட்டவிழ்த்தப்பட்டிருக்கின்றன.
 
அவற்றில் இருந்து இரண்டு சமூகங்களும் தங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டி இருக்கிறது. இவ்வாறான மறைமுக சக்திகளின் ஊடுருவல்களிலிருந்து தம்மை விடுவித்து கொள்ள வேண்டிய தருணம் இதுவாகும். எனவே மிகவும் அவதானத்துடனும் புரிந்துணர்வுடனும் நாம் செயற்பட வேண்டும்´ என தெரிவித்துள்ளார்.

தீ விபத்தில் கொட்டாஞ்சேனை ஆடைத் தொழிற்சாலைக்கு பாரிய சேதம்!

31st of December 2013
கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் நேற்றிரவு 9 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் குறித்த ஆடைத் தொழிற்சாலைக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.
 
கொழும்பு, கொட்டாஞ்சேனை – பரமானந்த விகாரை மாவத்தையில் உள்ள ஆடைத் தொழிற்சாலையிலேயே இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
 
கொட்டாஞ்சேனை பொலிஸார் மற்றும் கொழும்பு தீயணைப்புப் படையினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
 
தீயினால் ஏற்பட்ட நட்டம் இன்னும் கணிப்பிடப்படவில்லை.
தீ ஏற்பட்டமைக்கான காரணம் குறித்து கொட்டாஞ்சேனை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிட்சபேசன் இன்று திங்கட்கிழமை இலங்கை வந்துள்ளார்!

30th of December 2013
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிட்சபேசன் இன்று திங்கட்கிழமை இலங்கை வந்துள்ளார்.
 
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிட்சபேசன் இன்று திங்கட்கிழமை இலங்கை வந்துள்ளார்.

தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள இவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் மற்றும் வட மாகண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

அத்துடன் யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு செயற்படும் பல அமைப்புக்களையும் சந்தித்து அவர் பேச்சு நடத்தியுள்ளார்.

இதேவேளை, யாழிலுள்ள சபாபதிப்பிள்ளை அகதி முகாமிற்கும் இவர் விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த முகாமிற்கு ஏற்கனவே பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் விஜயம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

விக்கினேஸ்வரன் மஹிந்தவுடன் இணைந்து செயற்படத் தயார்: அமைச்சர் வாசுதேவ நாணயக்கார!

ai2130th of December 2013
வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் , அரசாங்கத்துடன் இணைந்து
செயற்பட தயாராகவே உள்ளார் . ஆனால் சம்பந்தனின் பிடிவாதமே விக்னேஸ்வரனை தடுக்கின்றது . தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசாங்கத்துடன் இணைத்தால் அதுவே ஜனநாயகத்தின் பெரிய வெற்றியாகும் விக்கினேஸ்வரனின் சம்பந்தியுமான தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார் .
 
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்
 
வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் அரசாங்கத்துடன் இணங்கி வட மாகாண செயற்பாடுகளை நடத்தவே விரும்புகின்றார் . வடக்கிற்கான அபிவிருத்திகளை தமிழ் மக்களின் உரிமைகளை பெற்று அமைதியாக ஆட்சி நடத்த வேண்டுமென்பதே வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் அவாவாகும் . எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் பிடிவாதமும் அரசாங்கத்துடன் முரண்படுவதன் காரணத்தினாலேயே விக்கினேஸ்வரன் எம்முடன் இணைந்து செயற்பட முடியாதுள்ளது . இன்று அரசாங்கத்திற்கு இருக்கும் பெரிய சிக்கல் தமிழ்தேசியக் கூட்டமைப்பே ஆகும் . அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை என்பதே உண்மை . சர்வதேசத்தையும் தமிழ் மக்களையும் தூண்டி விட்டு தனி தமிழ் ஈழத்தினை உருவாக்கவே சம்பந்தன் நினைக்கின்றார் .
 
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகள் யதார்த்தமானவை அல்ல . தனி இராச்சியத்தினை கோரி சுய ஆட்சிக்கான அடித்தளத்தினையே தமிழ் தேசியக் கூட்டமைப்பு விரும்புகின்றது . இதனை எந்த அரசாங்கம் வந்தாலும் நிறைவேற்ற முடியாதென்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் ஏனையவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் . எந்த இனத்தவரும் யாருக்கும் அடிமைகளில்லை என்பதை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டதனாலேயே வட மாகாண சபைத் தேர்தலை ஜனாதிபதி நடத்தினார் .
 
வடக்குத் தேர்தலில் கூட்டமைப்பு வெற்றி பெறுமென்பது அரசாங்கத்திற்கு நன்றாகவே தெரியும் . எனினும் தெற்கைப் போன்று சுதந்திரமாக செயற்படக்கூடிய மாகாணமாக வடக்கும் இருக்க வேண்டும் . வடக்கு மக்களுக்கென சுதந்திரமாக செயற்படவும் தமது விருப்பங்களை நிறைவேற்றும் உறுப்பினர்கள் வடக்கில் இருக்க வேண்டும் என்பதற்காகவே வட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டது .
 
எனவே நிறைவேறாத கொள்கைகளுக்காக கூட்டமைப்பு போராடுவதை விடவும் அரசாங்கத்துடன் இணைந்து தமிழர்களின் உரிமைகளை வென்றெடுத்து ஜனநாயக ரீதியிலான ஆட்சியினை நடத்த இணங்க வேண்டும் . அதுவே இன்றைய கால சூழ் நிலையின் தேவையாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார் .

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...