Saturday, January 11, 2014

த.தே.கூட்டமைப்புக்கு எதிராக பலமான கூட்டணி அமைக்க ஆனந்த சங்கரி, டக்ளஸ் திட்டம் ?.

Sunday,12th of January 2014
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக பலமான கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பில் அரசு சார்பு தமிழ்க் கட்சிகள் சிலவற்றுக்கு இடையில் யாழ்ப்பாணத்தில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
 
இந்த கலந்துரையாடலில், ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர் என்றும் அந்த தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த கலந்துரையாடல், யாழ். நல்லூரில் அமைந்துள்ள மாநாட்டு மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 4 மணியிலிருந்து இடம்பெற்றுள்ளது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் ஸ்ரீடெலோ அமைப்பினரும் கலந்துகொண்டுள்ளனரெனவும் அறியவந்துள்ளது.
 
இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கம் எதிர்காலத்தில் மேற்கூறப்பட்ட அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஒரு கூட்டணியாகச் செயற்படுவது என்பதுடன், இந்தக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது தொடர்பான விடயங்களை சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்- அங்கஜன்!

Sunday,12th of January 2014
புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென வட மாகாண சபையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ராமநாதன் அங்கஜன் கோரியுள்ளார். புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளுக்கு தொழில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
முன்னாள் போராளிகள் அமைதியான வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ள போதிலும், ஒரு சிலருக்கு மட்டுமே தொழில் வாய்ப்பு கிடைத்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் போராளிகளில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் ஊனமுற்றிருப்பதனையும் கவனிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
 
இவ்வாறான முன்னாள் புலிபோராளிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க வேண்டியது வட மாகாண சபையின் கடமையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வட மாகாண சபையின் நடவடிக்கைகளை ஒட்டுமொத்த நாடும், ஒட்டுமொத்த உலகமும் அவதானித்து கொண்டிருப்பதாகவும், இதனால் பிழைகள் விடுவதற்கு வாய்ப்பு கிடையாது எனவும் அங்கஜன் தெரிவித்துள்ளார்.
 
 
 
 
 






 

வலி. கிழக்கு பிரதேசசபை வரவு-செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னணி!


Saturday,11th of January 2014
 தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரும், மாகாண சபை உறுப்பினருமாகிய அரியகுட்டி பரம்சோதியின் நேரடி வழிகாட்டலில், தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த 7 பேர் EPDP-ன் 5 உறுப்பினர்களுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிலான வலி. கிழக்குப் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்தை முதல் முறையாக 3 மேலதிக வாக்குகளால் தோற்கடித்துள்ளனர்.
 
இதன்மூலம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிலான வலி. கிழக்குப் பிரதேச சபை விசேட ஆணையாளரின் ஆட்சியின் கீழ் கொண்டுவரும் ஆரம்பகட்ட நிலையினைத் தோற்றுவித்துள்ளனர்.
 
திரு. மாவை சேனாதிராசா அவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிலான பிரதேச சபைகளில் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், மாறாக தோற்கடிக்கும் வகையில் எதிர்த்து வாக்களிப்பவர்கள் மீது கட்சி கடும் நடவடிக்கை எடுக்குமென்ற பகிரங்க அறிக்கையைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களுக்கும் தனிப்பட்ட கடிதமும் அனுப்பியிருந்தார்.
இதற்கமைய 27.12.2013 அன்று நடைபெற்ற வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றுவதற்கான சிறப்புக் கூட்டத்தில் எதிர்த்து வாக்களிக்க எண்ணியிருந்த 7 பேரும் தவிர்த்துக் கொண்டனர். இதனால் ஈ.பி.டி.பி.யினரும் இக்கூட்டத்தினை தவிர்த்துக் கொண்டனர்.
 
இதன் பின்னர், மாகாண சபை உறுப்பினரான திரு.பரஞ்சோதியின் தூண்டுதலினால் அக்கூட்டத்திற்கு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற பொய்யான ஒரு நாடகத்தை மேற்கொண்டு, ஈ.பி.டி.பி.யினருடன் இணைந்து கையெழுத்திட்டு உள்ளூராட்சி அமைச்சரான முதலமைச்சருக்கு முறையீட்டை மேற்கொண்டனர்.
இதனால், இதுபற்றி விசாரிக்க முதல்வர் நியமித்த விசாரணைக்குழு அக்கூட்டம் திருப்திகரமாக நிறைவேற்றப்படவில்லை என்ற முடிவினை முதல்வருக்கு அறிவித்ததுடன், இன்று 10.01.2014 இல் தவிசாளர் தலைமையில் வரவு-செலவுத் திட்டம் மீண்டும் நிறைவேற்றப்பட வேண்டும் என பரிந்துரைத்திருந்தது.
 
இதனடிப்படையில், முதல்வர் உள்ளூராட்சி ஆணையாளருக்கு விடுத்த பணிப்பின் பேரில், உள்ளூராட்சி உதவி ஆணையாளரின் மேற்பார்வையில்
கூட்டம் தவிசாளர் தலைமையில் நடைபெற்றது.
 
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட உரும்பிராயைச் சேர்ந்த தமிழரசுக் கட்சி
உறுப்பினர், ஓய்வுபெற்ற ஆசிரியர் திருநாவுக்கரசு அவர்களை ஈ.பி.டி.பி உறுப்பினர் இராசநாயகம் தமது மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்ததும், கூட்டம் முடிந்ததும் உப தவிசாளரான நீர்வேலியைச் சார்ந்த சமாதான நீதவான் தர்மலிங்கம் அவர்களை ஈ.பி.டி.பி உறுப்பினர் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.
 
கூட்டத்தின் வாக்களிப்பின்போது, தவிசாளர் எனது 25 வருட நண்பனாக இருந்தபோதும் கட்சிக்கு கட்டுப்பட்டு எதிர்த்து வாக்களிக்கின்றேன் என்று உப தவிசாளரான தர்மலிங்கம் கூறியிருந்தார். இதுபற்றி அவரேதான் விளக்கம் கொடுக்க வேண்டும்.
 
இன்றைய கூட்டத்திற்கு முன்னர் தழிரசுக் கட்சியின் செயலாளர் திரு. மாவை சேனாதிராசா அவர்கள், வரவு-செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் சபை முடக்கப்படும், உறுப்பினர்கள் அனைவரும் வீட்டுக்செல்ல நேரும், வரவு-செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டு மக்களுக்கான சேவை தொடரப்பட வேண்டும் என்பதற்காகவே இக்கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இதனை நிறைவேற்றவேண்டும் என்பதை எதிராக நிற்கும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்துமாறு பரஞ்சோதியிடம் பணித்திருந்தார்.
எனினும், மாவை சேனாதிராசா அவர்களின் வேண்டுகோளை அவர்கள் அலட்சியப்படுத்தி வரவு-செலவுத் திட்டம் தோற்கடிக்கபட்டமையால், பிரதேச சபை செயற்பாடுகள் விசேட ஆணையாளரின் கீழ் கொண்டுவரப்படும் நிலை தோற்றுவிக்கப்பட்ட துரதிஷ்டவசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று சபையின் தவிசாளர் திரு. அ.உதயகுமார் தெரிவித்தார்.


இலங்கைக்கெதிராக ஜெனிவாவில் இம்முறையும் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்திற்கு சர்வதேச நாடுகள் ஆதரவு வழங்க வேண்டும்-TNA!


Saturday,11th of January 2014
 எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத் தொடரில், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்திற்கு ஆதரவு வழங்குமாறு சர்வதேச நாடுகளிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்து வருவதாக கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
 
இங்கு யுத்தம் முடிவடைந்துள்ளதாகவும், “ஒரே நாடு ஒரே மக்கள் என அரசாங்கம் கூறி வருகின்ற நிலையிலும், தமிழினத்தின் அடையாளங்களை அழித்து ,இருப்பை கேள்விக்குறியாக்குகின்ற அரசின் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு சர்வதேசம் குறிப்பாக, ஐ.நா. ஊதவ வேண்டுமென்றும் சர்வதேச விசாரணையே வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
துமிழாராட்சி மாநாட்டில் உயிரிழந்தவர்களின் நாற்பதாவது நினைவு தின நிகழ்வு, யாழ். வீருசிங்கம் மண்டபத்திற்கு முன்னாலுள்ள நினைவுத் தூபியில் நேற்றுக் காலை நடைபெற்றபோது அஞ்சலி செலுத்திவிட்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே மாவை சேனாதிராசா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டின் சம்பவம்ஙகள் இன்றும் எம் கண்முண்னே இருக்கின்றது. இதேபோன்று இதற்குப் பின்னரான தற்போதைய நிலையிலும் எத்தனையோ பல துன்பங்களும், துயரங்களும் நடந்துள்ளது, நடந்து கொண்டே தான் இருக்கின்றன.
அதாவது, 1974, 1981, 1984 கலவரமென இப்போது மிகப்பெரிய பேரழிவுக்குப் பின்னர், எத்தனையே உயிரிழப்பிற்குப் பின்னரான நிலையிலேயே மனித உரிமையாளர்கள் மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் இலங்கை மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது. இதன் தொடர்ச்சியாக எமது மக்களை பல வழிகளிலும் நடத்திய போராட்டங்கள் இன்று சர்வதேச மயப்படுத்தப்பட்டிருக்கின்றது.
 
கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்காகவும், தமிழின விடுதலைக்காகவும் அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட பல இலட்சக்கணக்கானோரை நாம் இழந்திருக்கின்றோம். அத்தொடு அந்தக் காலப்பகுதியில் ஏற்பட்ட துன்பங்கள், துயரங்கள் எமது மக்களை எந்தளவிற்குப் பாதித்திருக்கின்றது. எத்தகைய அழிவுகளை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதனை இன்றைய நிலையில் பார்க்கக்கூடியதாக உள்ளது.
 
இந்த நாட்டின் ஆட்சியிலிருக்கின்ற அரசாங்ககங்கள் இவ்வாறு படுகொலை செய்தும், பல்லாயிரக்கணக்கானோரை கடத்தியும் இருக்கின்றது என இன்று அரசிற்கு எதிராக போர்க்குற்றம் சுமத்தப்பட்டு, அதனை விசாரிக்கப்பட வேண்டுமென சர்வதேசத்திலேயே வலுவானதொரு கோரிக்கை
விடுக்கப்பட்டிருக்கின்றது.
 
இந்நிலையில், அடுததமாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைப்
பேரவையில் எடுக்கவுள்ள தீர்மானங்களில், இந்த விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தீர்மானங்கள் கொண்டு வரப்படவுள்ளன. இதில் குறிப்பாக, எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய, நம்பகத் தன்மை வாய்ந்த சர்வதேச விசாரனையே இந்த அரசின் போர்க்ககுற்றங்களுக்கு எதிராக விசாரிக்கப்பட வேண்டுமென்ற பிரேரணையே முக்கியத்துவம் பெற இருக்கின்றது.
 
அதாவது, இம்முறை நடைபெறவுள்ள மனித உரிமை கூட்டத் தொடரிலும், இங்கு இடம்பெற்ற போர்க்குற்றத்திற்கு எதிராக சர்வதேச விசாரணையை கோருகின்றோம். இங்கு இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள், பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளார்கள், இதற்கான பதிலை அரசாங்கமே சொல்ல வேண்டும். இங்கு இடம்பெற்றதற்கு எதிரான உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டுமென்பதில் நாங்கள் உறுதியாகவே இருக்கின்றோம்.
குறிப்பாக, நாங்கள் ஏற்கனவே அறிவித்ததுபோன்று, ஜெனிவாவில் இம்முறையும் கொண்டு வரப்படவுள்ள அந்தப் பிரேரணை வெற்றி பெறுவதற்கு ஆதரவு வழங்க வேண்டுமென, சர்வதேச நாடுகளைக் கோரி வருகின்றோம். அந்தப் பிரேரணை நாம் தொடர்ந்தும் சர்வதேச ரீதியாக உழைப்போம்.
 
ஏனெனில், இங்கு கடந்த 1974ம் ஆண்டு மட்டுமல்ல, தொடர்ந்து காலங்காலமாக இவ்வாறான சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதற்கு நீதி கிடைக்கவில்லை. இங்கு எந்தக்காலத்திலும் அது கிடைக்குமென்ற நம்பிக்கையும் இல்லை.
இந்நிலையில், தற்போதும் எமது இனத்தை கூண்டோடு அழிக்கின்ற நடவடிக்கைகளையே இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இதற்கு தீர்க்கமான விசாரணை நடத்துமென்றோ அல்லது இனத்தின் விடுதலைக்கான தீர்வையோ இந்த அரசாங்கம் கொடுக்கிமென்ற நம்பிக்கையும் இல்லை.
 
ஆகவே, இத்தகையப் பிரச்சினைகள் சர்வதேச மயப்படுத்தப்பட்டிருக்கின்ற நிலையில், சர்வதேசமே எமக்கு எல்லாம் செய்யுமென நாம் விட்டு விடாமல், தொடர்ந்தும் இராஜதந்திர ரீதியாகச் செயற்பட வேண்டும். சர்வதேச ரீதியாக அரசிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் இன விடுதலைக்கான தகுந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும். அல்லது அரசிற்கு எதிராக சர்வதேசம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கு இரானுவதந்திர ரீதியாக அனுகி, நாங்கள் எல்லோரும் ஒன்றுபட்டு, சர்வதேச ரீதியாக வெற்றி பெறுவதற்கு நாங்கள் எல்வோரும் உழகைக வேண்டும். சர்வதேச ரீதியாக நாட்டில் இழைக்கப்படுகின்ற போரக்குற்றங்களுக்கு எதிராக தீர்மானம் எடுப்பதற்கு நீண்ட காலங்கள் எடுக்கிறது. ஆனால், இங்கு அவ்வாறில்லாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது.
 
ஏனெனில், இமது இனத்தை அழிக்கின்ற நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆகவே, எமது இனத்தின் அடையாளங்களை அழிக்கின்ற அரசின் இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு சர்வதேசம் குறிப்பாக, ஐ.நா. உதவ வேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றோம். அத்தோடு, இங்கு இடம்பெறுகின்ற ஆக்கிரமிப்புகளும் நிறுத்துவதற்கு உதவ வேண்டும்.
 
தமிழினமாகவும், தமிழ் மண்ணாகவும் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழர் பிரதேசங்களில் தமிழர்களே ஆட்சி செய்ய வேண்டும். இதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். அத்தோடு சர்வதேசத்தின் கனவத்தை ஈர்க்கும் வகையில் தொடர்ந்து ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என மாவை சேனாதிராசா மேலும் தெரிவித்தார்.

சர்­வ­தேச நாடு­களால் விமர்­சனம் செய்­யப்­ப­டு­கின்­ற இலங்கையின் சட்டத்தை சிறந்­த­தாக்க முயற்­சி. ரவூப் ஹக்கீம்!

ss1128Saturday,11th of January 2014
அங்கீகாரத்தோடு விரைவில் நடைமுறைக்கு வரும் என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார் .
 
நீதிபதிகளுக்கு என ஒழுக்கக் கோவை ஒன்று தேவையாகவுள்ளது . அதனை விரைவில் வர்த்தமானியில் பிரசுரிப்போம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார் . மல்லாகம் நீதிமன்றத்தினை நேற்று முன்தினம் திறந்து வைத்த பின்னர் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் .
 
அவர் மேலும் தெரிவிக்கையில் ,
 
இலங்கையில் சட்டத்தின் ஆட்சி தொடர்பில் சர்வதேச நாடுகளால் விமர்சனம் செய்யப்படுகின்றது . அதனால் சட்டத்தின் ஆட்சியை மேலும் சிறந்ததாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம் .
 
போரின் பின்னர் நாட்டில் படிப்படியாக சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தி வருகின்றோம் . மாகாண சபைத் தேர்தலைக் கூட ஜனநாயக ரீதியில் நடத்தியிருந்தோம் . இந்த நிலையில் நீதிமன்ற அவமதிப்புத் தொடர்பில் புதிய சட்ட நியமங்களை அறிமுகப்படுத்த முடியும் . இதன் மூலம் நாட்டின் சட்டத்தின் ஆட்சியை சிறந்ததாக மாற்ற முடியும் . அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம் .
 
நீதிமன்ற அவமதிப்புத் தொடர்பாக பரந்த கலந்துரையாடலை நீதி அமைச்சு மேற்கொண்டு சட்ட ஆலோசனைக்குழு மூலமாக அதனைச் சட்டமாக்கியுள்ளது . விரைவில் அந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும் .
 
நீதித்துறையில் இருப்பவர்கள் மக்களுக்குப் பொறுப்புக் கூறவேண்டும் . இதுபற்றி பிரதம நீதியரசர் சில திட்டங்களை வகுத்து வருகிறார் . வெறும் சட்டங்களால் மாத்திரம் நாட்டில் நீதி , நிர்வாகத்தை சீர்செய்துவிட முடியாது . பொதுமக்கள் தமது பிணக்குத் தொடர்பில் இறுதியாகவே நீதிமன்றை நாடுகிறார்கள் . இவ்வாறு வரும் அவர்கள் அச்சத்துடனேயே வருகிறார்கள் . ஆனால் அவர்கள் நீதிமன்றுக்கு அச்சத்துடன் வரவேண்டிய அவசியமில்லை .

மேல் மற்றும் தென் மாகாண சபைகள் நாளை கலைக்கப்படும்?.

Saturday,11th of January 2014
மேல் மற்றும் தென் மாகாண சபைகள் பெரும்பாலும் நாளைய (12) தினம் கலைக்கப்படக்கூடும் என தெரியவருகிறது.
 
மாகாண சபையை கலைக்குமாறு தென் மற்றும் மேல் மாகாண முதலமமைச்சர்கள் யோசனை முன்வைத்த பின்னர் ஆளுநர்கள் அதனை செயற்படுத்துவர்.
 
இதேவேளை, மாகாண சபைகள் கலைக்கப்பட்ட பின் தேர்தல் மார்ச் 29ம் திகதி நடத்தப்படும் என அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Friday, January 10, 2014

போருக்குப் பின்னர் தமிழர்களுக்கு பாதுகாப்பில்லை- வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன்!

Saturday,11th of January 2014
இராணுவ ஆட்சி முறைமை தமிழர்களுக்கு தேவையில்லை என்றும், போருக்குப் பின்னரான காலத்தில் தமிழர்களுக்கான பாதுகாப்பு இல்லாத நிலையே இருப்பதாகவும் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 
வடக்கில் ஜனநாயகத்தை ஏற்படுத்தல்” என்னும் தொனிப்பொருளில் யாழிலுள்ள விடுதியொன்றில் இன்று நடைபெற்ற மாகாண சபை உறுப்பினர்கள், சிவில் சமுகப் பிரதிநிதிகளுக்கிடையிலான செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 
வடக்கில் வாழ்கின்ற மக்கள் பாதுகாப்பையும், சுதந்திரத்தையுமே எதிர்பார்க்கின்றார்களே தவிர, பெருந்தெருக்கள் அமைப்பதையோ, விடுதிகள் அமைப்பதையோ விரும்பவில்லை. போருக்குப் பிந்திய காலத்தில் மக்களின் பாதுகாப்பும், சுதந்திரமும் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
 
வட மாகாணசபை உருவாக்கப்பட்டு 3 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்கிறார்கள் என மக்கள் மத்தியில் கேள்விகள் பல எழுந்துள்ளது. முதற்கட்டமாக கிராம மட்டத்தில் தொழில்சார் முன்னேற்றத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.
 
வடக்கிலிருந்து பல கல்விமான்கள், புத்திஜீவிகள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். மீளவும் அவர்கள் இங்கே வருவதற்கு பாதுகாப்பு இல்லை என்ற ஒரு காரணத்தினாலேயே அவர்கள் இங்கே வருவதை தவிர்க்கின்றார்கள். அவர்கள் இங்கு மீளவும் வந்து பிரதேசத்தை அபிவிருத்தியடையச் செய்வதற்கு அவர்களது பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்துவதற்கு, அரசாங்கத்துடன், பேசவுள்ளோம் என்றார்.
 
எங்கள் மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் போரின் பின்னரும் மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாமலும், தமது விவசாய நிலங்களில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலை இன்றும் காணப்பட்டு வருகின்றது. அகதி முகாம்களில் வாழ்வாதார நெருக்கு வாரங்களுக்கு மத்தியில் எமது மக்கள் வாழந்து கொண்டிருக்கின்றார்கள்.
 
இந்நிலையில், எமது மக்களின் காணிகளை இராணுவம் ஆக்கிரமித்துள்ளதோடு, எமது நிலங்களில் இராணுவம் விவசாய நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். எல்லா சமூகங்களும் இணைந்து ஒற்றுமையினை நாங்கள் விரும்புகின்றோம்.
 
தமிழ் மக்களின் மொழி, கலை, கலாச்சாரம் தெரியாத இராணுவ ஆட்சி முறைமை வடக்கு தமிழர்களுக்கு தேவையில்லை. இதனால் தான் இராணுவப் பின்னணி கொண்ட ஒருவர் ஆளுனராக இருப்பதை நாங்கள் எதிர்ப்பதோடு, சிவில் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆளுனராக வரவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
 
நேற்று காலை நடைபெற்ற இந்த செயலமர்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை, வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதிக்கும் -இஸ்ரேல் ஜனாதிபதிக்குமிடையே சந்திப்பு!

Saturday,11th of January 2014
இஸ்ரேல் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று காலை ஜெரூசலம் நகரிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இஸ்ரேலிய ஜனாதிபதி ஷிமோன் பெரெஸுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இப் பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதியின் தலைமைத்துவத்தை பெரிதும் பாராட்டிய இஸ்ரேலிய ஜனாதிபதி ‘ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இலங்கை பெற்றுக்கொண்டுள்ள நன்மைகள் குறிப்பிடத்தக்க சாதனைகளாகும்' என்றும் 30 ஆண்டுகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து அபிவிருத்தியையும் நாட்டு மக்களிடையே ஐக்கியத்தையும் மேலோங்கச் செய்துள்ள ஜனாதிபதியின் செயற்பாடுகளை இஸ்ரேலிய ஜனாதிபதி பெரிதும் பாராட்டினார்.
 
செழுமையான வரலாற்றையும் புத்தி சாதுரயமுள்ள மக்களையும் இலங்கை கொண்டிருப்பதாக இஸ்ரேலிய ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இதனிடையே 2004 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது இஸ்ரேலிய அரசினால் வழங்கப்பட்ட உதவிகளுக்கு
ஜனாதிபதி தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.   

மேலும் இஸ்ரேல் -பலஸ்தீன் மோதலுக்கு தீர்வாக இரு நாடுகளிலும் வேறு ஆட்சிகளை அமைப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிபார்சுக்கு தாம் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்
 
இதனையடுத்து, இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் இஸ்ரேல் வர்த்தக பிரமுகர்களை ஜனாதிபதி சந்தித்ததுடன் இரு நாடுகளுக்கிடையில் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அதனையடுத்து ஜரூசலம் வனவியல் பூங்காவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ஞாபகர்த்தமாக ஒலிவ் மரக்கன்று ஒன்றையும் நாட்டி வைத்தார்.
 
இந் நிகழ்வின்போது வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அமைச்சின் மேற்பார்வை எம்பி சஜித் வாஸ் குணவர்த்தன, பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, இஸ்ரேல் நாட்டுக்கான இலங்கை தூதுவர் சரத் டி விஜேசிங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அடிப்படையற்ற இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் ஆச்சரியமளிக்கின்றது-

Saturday,11th of January 2014
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது இலங்கை இராணுவத்தால் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்ட இடங்கள் என்ற பெயரில் சென். அந்தோனி மைதான புகைப்படங்களை அமெரிக்க தூதரகத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களாக நேற்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
 
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தின் பீரங்கி தாக்குதலில் நூற்றுக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் கொல்லப்பட்ட இடம் என்று அந்த புகைப்படத்துக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களாக இவை முன்வைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் வாழும் மக்களின் கூற்றுப்படி தமிழீழ விடுதலை புலிகள் போராட்டத்தின் போது காயங்கள் காரணமாக இறந்த தங்கள் பிரிவினரை ஒப்படைக்க இந்த நிலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இடம் பாதுகாப்பாக இல்லை என்றால், விடுதலை புலிகள் அந்த நோக்கத்திற்காக அதை ஒருபோதும் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள்.
 
பொதுமக்கள் இவ் இடத்தில் இருக்கும் போது இந்த இடத்தில் ஷெல் தாக்குதல்கள் நடத்தப்படமாட்டாது என்பதை உருதி செய்த பின்னரே இதற்கு முன்வந்துள்ளனர் என்பது உறுதி.
மேலும் இலங்கை இராணுவம் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது கொத்து (கிளஸ்டர்) மற்றும் இரசாயன குண்டுகளை பயன்படுத்தியதாக யாழ், மன்னார் மறைமாவட்ட ஆயர்கள் கூறியுள்ள கூற்றில் எந்தவித உண்மையும் கிடையாது என்றும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
 
யாழ்ப்பாண ஆயர் தோமஸ் செளந்தர நாயகம், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆகியோரின் கூற்றை இலங்கை இராணுவத்தின் சார்பில் தான் முற்றாக மறுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை இலங்கை விமானப்படை ஆளில்லா விமானத்தை பயன்படுத்தி உறுதி செய்த பயங்கரவாதிகளின் இலக்கை தவிர வேறு எந்த இடத்திற்கும் விமானத் தாக்குதலை நடத்தவில்லை என்றும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
 
இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் போர் குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே ரெப் தலைமையிலான குழுவினரை சந்தித்த மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப், முல்லைத்தீவு புதுமாத்தளன் பிரதேசங்களில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது படையினரால் விமானக்குண்டுகள், கொத்தணிக் குண்டுகள் (கிளஸ்டர்) மற்றும் இரசாயனக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன என்றும், இந்த மூன்று வகையான குண்டுத் தாக்குதல்கள் காரணமாக பெரும்பாலான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்றும் தூதுக்குழுவினரிடம் இவர் குறிப்பிட்டுள்ளார். மன்னார் ஆயரின் இந்தக் கூற்றுத் தொடர்பாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரியவிடம் தொடர்புகொண்டு கேட்டபோது,
 
இலங்கை இராணுவம் யுத்த வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் யுத்த சம்பிரதாய முறைக்கு அப்பால் எந்தவிதமான ஆயுதங்களையும் பயன்படுத்த வில்லை. ஏனெனில் சகல சந்தர்ப்பங்களிலும் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆயுதங் களையே பயன்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொத்தணி மற்றும் இரசாயனக் குண்டுகளைப் பயன்படுத்துவதாகக் கூறுவதில் எந்தவித உண்மையும் கிடையாது.
 
அந்தக் கூற்றை நான் திட்டவட்டமாக மறுக்கின்றேன்.
வெளிநாடுகளிலிருந்து பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் சிலரும், வெளிநாட்டில் சொகுசாக வாழ நினைக்கும் சிலருமே இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தனர். இந்நிலையில் சகலராலும் மதிக்கத்தக்க கெளரவம் மிக்க ஒரு மதத் தலைவரான மன்னார் மறைமாவட்ட ஆயரின் மேற்படி கூற்று மிகவும் மன வருத்தத்துக்குரிய தொன்றாகும். ஏனெனில், இவ்வாறான கூற்றானது புலம்பெயர்ந்திருந்து எமது நாட்டைப் பிளவுபடுத்த நினைக்கும் சிலரது செயற்பாடுகளுக்கு உந்துசக்தியாக அமைகின்றது.
 
அதேசமயம் மார்ச் மாதத்தில் நடை பெறவுள்ள ஜெனீவா மனித உரிமைப் பேரவையை இலக்காக வைத்தே சிலர் இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுக்களையும், கருத்துக்களையும் கூறிவருகின்றனர் என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
 
இலங்கை பாதுகாப்புப் படையினர் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சகல சந்தர்ப்பங்களிலும் இழப்புக்கள் இல்லாத முறையையே பேணி வந்தது. இந்நிலையில் விமானக் குண்டுத் தாக்குதல் தொடர்பிலும் கூறப்பட்டுள்ளது. விமானப்படையினர் ஆளில்லாத விமானத்தைப் பயன்படுத்தி பயங்கர வாதிகளின் நடமாட்டத்தை உறுதி செய்ததன் பின்னரே பயங்கரவாதிகளின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தினர். மாறாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொதுமக்களை இலக்குவைத்தோ அல்லது பொதுமக்கள் நடமாட்டமுள்ள பிரதேசத்தை இலக்குவைத்தோ எந்தவித விமானத் தாக்குதல்களையும் நடத்தவில்லை என்பதை நான் திட்டவட்டமாகக் கூறிக்கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டார்.

யாழ் மாவட்ட பொலிஸ் நிலையங்களினால் ஒரு வார காலத்தில் எழுபத்தாறு பேர் கைது!

ss1037Friday,10th of January 2014
செய்யப்பட்டுள்ளதாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இன்று பகல் இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார் .
 
யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் அடித்து காயப்படுத்திய சம்பவம் சம்பந்தமாக 29 பேரும் குடிபோதையில் வாகனம் செலுத்தியது சம்பந்தமாக 13 பேரும் வீட்டினுள் அத்து மீறி பிரவேசித்தது சம்பந்தமாக 02 பேரும் சட்டவிரோதமான முறையில் சாரயம் விற்பனை செய்த 04 பேரும் பொது இடத்தில் மது போதையில் கலகம் விளைவித்த ஏழு பேரும் பொருட்களுக்கு நட்டம் ஏற்படுத்திய சம்பவத்துடன் தொடப்புடையவர்கள் எனக்கருதப்படும் 04 பேரும் சந்தேகத்தின்பெயரில் 16 பேரும் பிடியானை பிறப்பிக்கப்பட்ட 19 பேரும் வீதி விபத்துக்களை எற்படுத்திய 02 பேரும்
 
களவு சம்பந்தமாக 07 பேரும் கூரிய ஆயுதங்களை வைத்திருந்த குற்றச் சாட்டின்பெயரில் 12 பேரும் சிறு காயங்கள் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பெயரில் 02 பேரும் ஏனைய குற்றங்கள் சம்பந்தமாக 118 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் ஆஜர் பொலிஸ் பிரிவில் பாரிய குற்றங்கள் சம்பந்தமாக 05 பேரும் பிடியானை சம்பந்தமாக 05 பேரும் சந்தேகத்தின் பெயரில் 10 பேரும் ஏனைய குற்றங்கள் சம்பந்தமாக 38 பேருமாக 58 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவுத்துள்ளார் .

Thursday, January 9, 2014

மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை மாவட்­டங்­க­ளுக்­கான புதிய பிரதி பொலிஸ் மா அதிபர் கடமை பொறுப்­பேற்பு!

ss99Thursday,9th of January 2014
மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டங்களுக்கான புதிய பிரதி பொலிஸ்மா அதிபராக
நியமிக்கப்பட்டுள்ள இந்துநில் கருணாரட்ன கடமைகளை பொறுப்பேற்றார் .
 
புதிதாக கடமையேற்ற பிரதி பொலிஸ்மா அதிபருக்கு மட்டக்களப்பு மாவட்ட பொலிஸாரினால் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது .
 
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேவன் சில்வா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 12 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் , உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் , மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர் .
 
இம் மாவட்டங்களுக்குப் பொறுப்பாக கடமைபுரிந்த வி . இந்திரன் அண்மையில் இடமாற்றம் பெற்றுச் சென்றமை குறிப்பிடத்தக்கது .

அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

ai71Thursday,9th of January 2014
அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக மேற்கொண்டு வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது .
 
இதனால் கொள்ளுபிட்டி தொடக்கம் காலி முகத்திடல் வரையான பிரதான வீதியின் ஒருவழி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
 
அமெரிக்காவின் போர் குற்றவிசாரணைக்குப் பொறுப்பான தூதுவர் இலங்கைக்கு வந்துள்ள நிலையில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது .

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ராஜதந்திர ரீதியில் எதிர்கொள்ள தயார்-கெஹெலிய ரம்புக்வெல்ல!

Thursday,9th of January 2014
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட
உள்ள யோசனையை சந்திக்க தயாராக இருப்பதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார் .

அமெரிக்கா தகவல்களை எப்படி திரட்டி வருகிறது என்பதை அரசாங்கம் அறிந்து வைத்துள்ளது . அந்த செயற்பாட்டில் அமெரிக்க ஈடுபட்டுள்ளதையும் அரசாங்கம் அறியும் .

மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைக்கப்படும் எந்த யோசனையாக இருந்தாலும் அதனை அரசாங்கம் ராஜதந்திர ரீதியில் எதிர்நோக்குவதற்காக ஏற்பாடுகளை செய்து வருகிறது .

வெற்றியோ தோல்வியோ அரசாங்கம் அதனை எதிர்கொள்ளும் . ஏற்கனவே மனித உரிமை ஆணைக்குழுவில் ஒரு முறை அரசாங்கம் வெற்றிப்பெற்றதுடன் ஒரு முறை தோல்வியை சந்தித்துள்ளது .

வேறு எதற்காகவும் அல்ல இலங்கை மக்களுக்காக எந்த சவால்களையும் எதிர்கொள்ள அரசாங்கம் தயாராகவே உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .

கடந்த முறை மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைத்த இலங்கைக்கு எதிரான யோசனைக்கு இலங்கைக்கு ஆதரவாக 30 நாடுகள் வாக்களித்தன . இதனால் அது முழுமையான தோல்வியல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார் .

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் அமெரிக்கா , இலங்கைக்கு எதிரான புதிய யோசனையை கொண்டு வரும் என அமெரிக்க அதிகாரிகள் நேற்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது .

Tuesday, January 7, 2014

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் “வழமையான மீன்பிடிப் பிரதேசம்” என்று கூறப்படுதை இலங்கை நிராகரித்துள்ளது!

Wednesday,8th of January 2014
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் “வழமையான மீன்பிடிப் பிரதேசம்” என்று கூறப்படுதை இலங்கை நிராகரித்துள்ளது.
இலங்கையின் கடற்படை பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய இந்த நிராகரிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழக மீனவர்கள் மன்னார் வளைகுடாவில் தமது வழமையான மீன்பிடிப் பிரதேசத்தில் தொழில் செய்யும் போது இலங்கை கடற்படையினரால் துன்புறுத்தப்படுவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்திய- இலங்கை கடற்பிரதேசம் ஐக்கிய நாடுகளின் கடல் சட்டத்தின் கீழ் பிரிக்கப்பட்டுள்ளது. இதன்போது தமிழக மீனவர்களுக்கு என்று வழமையான கடல்பகுதி என்று ஒன்று வரையறுக்கப்படவில்லை.
இந்தநிலையில் தமது எல்லைக்குள் வரும் வெளிநாட்டு மீனவர்களை தடுப்பதற்கு இலங்கை கடற்படையினர் நடவடிக்கை எடுப்பதாக கோசல வர்ணகுலசூரிய குறிப்பிட்டார்.
இந்திய கரையோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்ட 59 இலங்கை மீனவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் நீதிமன்றத்தில் இந்த குற்றப்பத்திரிகை நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்திய சிறைகளில் சுமார் 150 இலங்கை மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை சிறைகளில் 300 இந்திய மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் சட்டவிரோதமாக இந்திய எல்லையில் மீன்பிடியில் ஈடுபட்டதாக கூறி, தமிழக காவல்துறையினர் 59 மீனவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.
இவர்கள் இலங்கையின் நீர்கொழும்பு, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.
கடந்த நவம்பர் மாதத்தில் இவர்கள் இந்திய கரையோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை வந்துள்ள ஸ்டீபன் ஜே. ராப், நேற்று இரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கொழும்பில் சந்திப்பு!

Wednesday,8th of January 2014
இலங்கையின் தற்போதைய நிலைமைகளை ஆராய்வதற்காக உத்தியோகபூர்வப் பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஸ்டீபன் ஜே. ராப், நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைக் கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை இரவு நேர உணவுடன் இருமணி நேரம் அவர் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்றிரவு தெரிவித்தவை வருமாறு:-
வடக்கு, கிழக்கின் தற்போதைய நிலைமை குறித்தும், தமிழ் மக்கள் எதிர்நோக்கிய, எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்ற பிரச்சினைகள் தொடர்பிலும் சர்வதேச போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸடீபன் ராப் எம்மிடம் விரிவாகக் கேட்டறிந்தார்.
கடந்த 2012, 2013 ஆம் ஆண்டுகளில் இரு தடவைகள் இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் உலக நாடுகளின் பேராதரவுடன் அமெரிக்காவால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இலங்கை அரசு நிறைவேற்றாமல் உள்ளது என்று அவர் இந்தச் சந்திப்பின் போது விசனம் வெளியிட்டார்.
இலங்கை அரசும் அதன் படைகளும் வன்னியில் இறுதிக்கட்டப் போரில் சர்வதேச விதிமுறைகளை மீறி மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளன என்று அவர் இதன்போது தெரிவித்தார்.
எனவே, இறுதிக்கட்டப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தும் தீர்மானத்தை எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்ற அமெரிக்கா முழுமூச்சுடன் தனது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என்றும் அவர் எம்மிடம் கூறினார்.
அந்தத் தீர்மானத்தில் இறுதிக்கட்டப் போரில் நடைபெற்ற மனித உரிமை
மீறல்கள், போர்க்குற்றங்கள் மட்டுமல்லாது தமிழர் தாயகத்தில் தற்போது இடம்பெற்று வரும் இராணுவ ஆக்கிரமிப்புக்கள், வன்முறைகள் உள்ளிட்ட இலங்கை அரசும், அதன் படைகளும் தமிழ் மக்கள் மீது இழைத்து வரும் மீறல்களும் உள்ளடக்கப்பட வேண்டும் என்று நாம் அவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குள் மாகாண சபை அமைக்கப்பட்ட பின்னரும், அங்கு அரசின் அனுமதியுடன் இராணுவத்தினர் தமிழ் மக்களின் சொந்த நிலங்களை அபகரித்து வருகின்றனர் என்றும் அவரிடம் சுட்டிக்காட்டினோம்.
இலங்கையில் போர் நிறைவடைந்து நான்கு ஆண்டுகள் கழிந்த நிலையிலும் அங்கு குற்றச் செயல்களும் மக்கள் மீதான கெடுபிடிகளும் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன என்று அல்ஜசீரா தொலைக்காட்சி அண்மையில் குற்றம்சாட்டியுள்ளதையும் அவரின் கவனத்துக்குக் கொண்டு வந்தோம்.
கடத்தல்கள், காணாமல்போதல்கள், சித்திரவதைகள், முன்னாள் பெண் போராளிகளுக்கு எதிரான இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் பாலியல் வன்முறைகள் தொடர்கின்றன என்றும், இரகசிய தடுப்பு முகாம்களிலும், சிறைச்சாலைகளிலும் முன்னாள் போராளிகள் மற்றும் அவர்களின் ஆதரவளார்கள் என்ற பெயர்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் மீதான சித்திரவதைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன என்று அல்ஜசீரா தொலைக்காட்சி வெளியிட்ட தகவல்களையும் அவரிடம் கூறினோம்.
இதேவேளை, மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழி விவகாரத்தையும் அவரின் கவனத்துக்குக் கொண்டு வந்தோம்.
அந்த மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்டு வரும் எலும்புக்கூடுகளைச் சீனாவுக்குப் பகுப்பாய்வு என்ற பெயரில் அனுப்பி அதன் உண்மைகளை மறைக்க இலங்கை அரசு முயற்சித்து வருகின்றது என்றும், எனவே இதை அமெரிக்கா உடன் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இது தொடர்பில் சர்வதேச விசாரணையை நடத்த அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் நாம் அவரிடம் வலியுறுத்தினோம் என்றார்.
இன்று புதன்கிழமை வட பகுதிக்குச் செல்லும் சர்வதேச போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்ரீபன் ராப், மாலை 4 மணியளவில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடுவர் என்றும் சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.

Monday, January 6, 2014

அரசாங்கத்தை கவிழ்க்கும் முனைப்புக்களில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது – விமல் வீரவன்ச!

Monday, 6th of January 2014
அரசாங்கத்தை கவிழ்க்கும் முனைப்புக்களில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
 
ஆட்சி அதிகாரத்தில் மாற்றம் செய்யும் வகையில் அமெரிக்கா செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில், அமெரிக்கா இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் என்பது தெளிவாகத் தெரிகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதனை பயன்படுத்தி இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா முயற்சிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு அதிகளவு சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

ஏனெனில், அமெரிக்கா ஏனைய உறுப்பு நாடுகள் மீது அழுத்தம் செலுத்தக் கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பமாக சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலை இலக்கு வைத்து அமெரிக்கா செயற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டின் நிறைவில் அமெரிக்காவின் உள்நோக்கம் என்னவென்பது தெளிவாக புலனாகும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

உடல் மற்றும் உள வளம் கொண்ட பரம்பரையினரை உருவாக்க இன்று முதல் அனைத்து பாடசாலைகளிலும் உடற்பயிற்சி!

ss629
Monday, 6th of January 2014
திட்டம் ஆரம்பிக்கப்படுகிறது .
 
இதற்கிணங்க பாடசாலை நாட்களில் தினந்தோறும் காலை 10 நிமிடங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்த வேலைத் திட்டத்தில் அனைத்து மாணவர்களதும் பங்களிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளதென கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார் .
 
இது தொடர்பிலான சுற்றறிக்கை அனைத்து பாடசாலைகளினதும் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிரு ப்பதாகவும் அமைச்சர் கூறினார் .
 
பாடசாலை தேக அப்பியாச வேலைத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று இப்பாகமுவ மத்தியமகா வித்தியாலயத்தில் அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் முன்னெடுக்கப்படுகிறது .
 
பாடசாலை மாணவர்கள் ஏதாவதொரு விளையாட்டில் பங்கேற்கவேண்டியது , அமைச்சரவையினால் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் இலவச கல்வி பெறும் ஒவ்வொரு மாணவரும் காலையில் உடற்பயிற்சி பெறவேண்டியது அவசிய மெனவும் கல்வி அமைச்சர் வலியுறுத்தினார் .
 
ஆரோக்கியமான உடல் மற்றும் உள வளம் கொண்ட பரம்பரையினரை உருவாக்குவதே மஹிந்த சிந்தனையின் நோக்கம் என்பதன் காரணமாகவே பாடசாலை மாணவர்களுக்கு தேக அப்பியாசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதெனவும் அமைச்சர் கூறினார் .
 
இந்த வேலை திட்டத்திற்கு அவசியமான வீடியோ இறுவெட்டுகள் , இசை நாதம் , ஆசிரியர் கையேடு ஆகியன தற்போது அனைத்து பாடசாலைகளுக்கும் பெற்றுக்கொடுக்கப்பட்டிருப்பதுடன் ஆசிரியர்களுக்கும் இது தொடர்பிலான பயிற்சிகள் , வழங்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார் .

பாரத்த லக்ஸ்மன் கொலை வழக்கின் முதலாவது பிரதிவாதியை கைது செய்ய உத்தரவு!

Monday, 6th of January 2014
பாரத்த லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை வழக்கின் முதலாவது பிரதிவாதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது.
 
இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் முதலாவது பிரதிவாதி ஆஜராகியிருக்கவில்லை.
 
வழக்கின் மூன்றாவது பிரதிவாதி சுகயீனமுற்றுள்ளதால் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
 
பாரத்த லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை வழக்கின் 11ஆவது பிரதிவாதியான பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா பாராளுமன்றத்தில் இன்று ஆஜரானார்.
 
இந்த வழக்கு பெப்ரவரி மாதம் ஆறாம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 

மன்னார் மனித புதைகுழி புலிகளால் கொலை செய்யப்பட்டவர்களுடையது: இலங்கைப் பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு!

Monday, 6th of January 2014
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழியில் அகழ்வுப்
பணிகள் இடம்பெறவுள்ளதாக அறிவித்துள்ள பொலிஸ் தலைமையகம் இதுபுலிகளால் கொல்லப்பட்டுள்ளவர்களுடையதாக இருக்கலாம் என அறிவித்துள்ளது .

இந்த மனித புதைக்குழியில் இருந்து இதுவரை 18 மண்டையோடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் , சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் .

அனுராதபுரம் வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்திய அதிகாரி , பேராதனை பல்லைக்கழக மண் ஆராய்ச்சிப் பிரிவின் அதிகாரி ஆகியோர் இந்த அகழ்வுப் பணிகளை மேற்பார்வை செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .

நீண்டகாலமாக புலிகள் வசமிருந்த பிரதேசம் இதுவெனவும் , அவர்களால் கொலை செய்யப்பட்டவர்களே இவ்வாறு புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் பிரதேச மக்கள் மத்தியில் சந்தேகம் நிலவுவதாக அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் .

கடந்த வருடம் டிசம்பர் 20 ஆம் திகதி மன்னார் யு -32 வீதியின் திருக்கேதீஸ்வரம் பகுதியில் நீர் குழாய் பொருத்தும் பணிகளுக்காக நிலம் தோண்டப்பட்டபோது இந்த மனித புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்டது .

பின்னர் மன்னார் நீதவான் பிறப்பித்த உத்தரவிற்கு அமைய புதைக்குழியில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .

இப்புதைகுழி இருந்த இடத்தில் முன்னர் நீணடகாலமாக இராணுவம் முகாமைத்து நிலைகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது .

Sunday, January 5, 2014

கருணா, பிள்ளையான், கே.பி போன்று பதுமனையும் இலங்கை அரசு இணைத்துள்ளது! வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன்!

Monday, 6th of January 2014
கருணா , பிள்ளையான் , கே . பி ஆகியோரை தங்கள் பக்கம் இணைத்துக் கொண்டது போன்று
பதுமனையும் இலங்கை அரசு தங்கள் பக்கம் இணைத்துக் கொள்ளவுள்ளதாகத் தெரிய வருகிறது . என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் .
சிங்கள ஊடகம் ஒன்றுக்குக் கருத்து வெளியிட்டுள்ள போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் .
 அவர் மேலும் கருத்துக் கூறுகையில் ,
புலிகள் அமைப்பு பதுமனின் தலைமையில் மீளக்கட்டி எழுப்பப்படவுள்ளதாகக் கூறி தனக்கு ஈமெயில் ஒன்று கிடைத்துள்ளது .
வடக்கில் இராணுவத்தை ஸ்திரப்படுத்தும் நடவடிக்கைகளையே அரசு முன்னெடுத்துள்ளது .
மேலும் கே . பி , கருணா , பிள்ளையான் ஆகியோரை தங்கள் பக்கம் இணைத்துக் கொண்டது போன்று பதுமனையும் இலங்கை அரசு தனது பக்கம் இணைத்துக் கொள்ளவுள்ளதாகத் தெரிவருகிறது .
 யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்கள் ஆகின்ற நிலையிலும் வடபுலத்தில் 150,000 படையினர் நிலைகொள்ளச் செயப்பட்டுள்ளனர் .
 இதன் காரணமாக பல பிரச்சினைகள் வடக்கில் எழுந்துள்ளன .
இவர்களால் மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் அதிகளவான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன .
இதனால் அவர்களால் தொழில் செய்யவும் முடியாத நிலையேற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார் .

தெற்­கா­சி­யாவில் பன்­மு­கத்­தன்­மையின் சவால்கள்' சந்­தி­ரிகா தலை­மையில் கொழும்பில் விசேட கருத்­த­ரங்கு!

Monday, 6th of January 2014
தெற்காசியாவில் பன்முகத்தன்மையின் சவால்கள் எனும் தலைப்பில் உள்நாட்டு மற்றும்சர்வதேச ஆய்வாளர்கள் கலந்துகொள்ளும் விசேட கருத்தரங்கு ஒன்று நாளை செவ்வாய்க்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது .
 
தெற்காசிய கொள்கை மற்றும் ஆய்வு நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் நடைபெறவுள்ளது .

அத்துடன் இந்தக் கருத்தரங்கில் பேராசிரியர் ராதிகா குமாரசுவாமி , இந்தியாவின் , பேராசிரியர் ரஜீவ் பார்கவா , பிரான்ஸ் நாட்டின் கலாநிதி கிறிஸ்டோபி ஜெப்ரீலோட் பாகிஸ்தானின் அஸ்மா ஜஹாங்கீர் ஆகியோர் உரையாற்றவுள்ளனர் .

அமைதியான ஒத்திணங்கிய வாழ்வு , மத சகிப்புத்தன்மை பன்மை சமூகங்கள் போன்ற தலைப்புக்களில் உரை நிகழ்த்தப்படவுள்ளன . மதங்களுக்கு இடையில் பிணக்குளை உருவாக்கும் செயற்பாடுகளை எவ்வாறு தவிர்ப்பது என்பது தொடர்பாக கருத்தரங்களில் விரிவாக ஆராயப்படும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் சமூகத்தினை அடக்கி ஆள நினைக்கக்கூடாது - சிப்லி பாறூக்!

Sunday,5th of January 2014
பெரும்பான்மை சமூகத்திடம் இருந்து அரசியல் அதிகாரம் கிடைக்க வேண்டும். சுயாட்சி கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் சமூகத்தினை அடக்கி ஆள நினைக்கக்கூடாது. கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக முஸ்லிம் சமூகத்தினைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதை கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கை முஸ்லிம் சமூகத்தை வேதனைப்பட வைத்துள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 11 பேர் கையொப்பமிட்டு கிழக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக ஊடகங்களில் பார்த்து வேதனையும் அடைகின்றேன். முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த ஒருவர் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 11 பேர் கையொப்பமிட்டு தங்களது எதிர்ப்பினை ஆளுநருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர்.

இதனை நோக்குகின்றபோது இந்நாட்டின் சிறுபான்மையினராகவும் கிழக்கு மாகாணத்தில் இரண்டாவது சிறுபான்மையினராகவும் மொத்த சனத்தொகையில் 35 வீதத்திற்கு மேல் வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்தின் மீது நாட்டின் இன்னுமோர் சிறுபான்மை இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டிருக்கின்ற இனத்துவேசத்தையும் முஸ்லிம்கள் தமிழர்களால் அடக்கி ஆளப்பட வேண்டும் என்கின்ற கருத்துக்கு தூபமிடுவதைப் போன்ற ஓர் செயலாகவே இதனைப்பார்க்க முடிகின்றது.
 
சமூகங்களை பிரித்தாளுவதன் மூலம் அரசியல் இலாபம் தேடுகின்ற ஈனச் செயலாகவே இதனைப் பார்க்க முடிகின்றது. முஸ்லிம்கள் இதை திரும்பிப் பார்க்கின்ற போது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உதவி அரசாங்க அதிபர் என்பது முஸ்லிம்களுக்குரிய ஓர் ஆசனமாக இருக்கையில் 21 வருடங்களுக்கு முன்பு புலிப்பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட முன்னாள் உதவி அரசாங்க அதிபர் வை.அஹமட்டுக்கு பின்பு இதுவரை முஸ்லிம்களுக்குரிய அந்த ஆசனம் தமிழர்களால் தான் நிரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

ஆனால் மேலதிக அரசாங்க அதிபர் ஒருவரை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நியமியுங்கள் என எந்த ஒரு முஸ்லிம் அரசியல் வாதியும் கோரவில்லை.

சமத்துவம், விட்டுக்கொடுப்பு, இன ஒற்றுமை பற்றி பேசுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனுடைய சுயரூபத்தை வெளிக்காட்டுகின்ற இந்த ஈனச்செயலை கிழக்கு வாழ் முஸ்லிம்கள் வன்மையாகக் கண்டிக்கின்றனர்.

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எச்சரிக்கை?

Sunday,5th of January 2014
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமக்கு உரிய கடமைகளை மாத்திரமே செய்ய வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

கட்சியின் அரசியல் சபை உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்றஉறுப்பினருமான பியசிறி விஜேநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

 புலிகள் இயக்கம் மீண்டும் கட்டியெழுப்பப்படுவதாக தமக்கு மின்னஞ்சல்கள் அனுப்பப்படுவதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வடக்கில் பாதுகாப்பினை பலப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.

இந்த நிலையில் வடக்கில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்ற வேண்டும் என்று கோருவது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழில் 3 நீதிமன்றக் கட்டிடங்களின் திறப்பு விழா வடக்கு முதலமைச்சருக்கு அழைப்பில்லை- அழைக்கக் கோரி யாழ். சட்டத்தரணிகள் தீர்மானம்!

Sunday,5th of January 2014
யாழ். மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 3 புதிய மாவட்ட நீதிமன்றக் கட்டிடத் தொகுதிகளின் திறப்பு விழா எதிர்வரும் 9ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இத்திறப்புவிழாவுக்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அழைக்கப்பட வேண்டும் என யாழ். சட்டத்தரணிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இந்தத் தீர்மானத்தை சட்டத்தரணி வி.டி.விஷ்வலிங்கம் கொண்டுவந்தார். பின்னர் இத்தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் யாழ். மாவட்ட நீதிபதி த.விக்னராஜா இந்த தீர்மானத்தை வழிமொழிந்தார்.

நீதிமன்றக் கட்டிடத் தொகுதிகளின் திறப்புவிழாவுக்கு வடக்கு முதலமைச்சர் அழைக்கப்பட வேண்டும் எனக் கோரும் சட்டத்தரணிகளின் இத்தீர்மானம் நீதிச் சேவைகள் ஆணைக்குழு மற்றும் நீதியமைச்சுக்கு
அனுப்பிவைக்கப்பட்டன.
 
சாவகச்சேரி, மல்லாகம் மற்றும் ஊர்காவற்றுறை மாவட்ட நீதிமன்றங்களுக்கான புதிய கட்டிடம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், இந்நீதிமன்றக் கட்டிடத் தொகுதிகள் எதிர்வரும் 9ம் தேதி வியாழக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளன.
 
நீதிமன்றக் கட்டிடத் தொகுதிகளின் திறப்பு விழாவில் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், சட்டமா அதிபர், நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர். எனினும், வட மாகாணத்தில் நடைபெறும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
 
இந்நிலையில், திறப்புவிழா நிகழ்வு ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி செல்வி. சாந்தா அபிமன்னசிங்கம் தலைமையில், யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் நேற்று யாழ். நீதிமன்ற கட்டிடத்தில் கூடி ஆராய்ந்தனர். இதன்போதே வடக்கு முதலமைச்சர் நீதிமன்ற கட்டிடத் தொகுதிகளின் திறப்பு விழாவுக்கு அழைக்கப்படாத விடயம் குறித்து சட்டத்தரணிகளால் பிரஸ்தாபிக்கப்பட்டது.
 
வட மாகாணத்தில் நடைபெறும் நிகழ்வொன்றில், அம்மாகாண முதலமைச்சர் புறக்கணிக்கப்படுவது குறித்து சட்டத்தரணிகள் பலர் கடும் விசனம் வெளியிட்டனர். முதலமைச்சர் அழைக்கப்படாவிட்டால் இந்த நிகழ்வை புறக்கணிப்பதா? இல்லையா என்பது குறித்தும் ஆராயப்பட்டு அதுகுறித்த வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
 
முதலமைச்சர் அழைக்கப்படாவிட்டால், இந்த நிகழ்வைப் புறக்கணிக்க வேண்டுமென சட்டத்தரணிகள் பலர் வாதிட்டனர். இந்த விடயத்தை அரசியலாக்குவது தேவையற்றது என வேறு சிலர் எதிர்வாதம் புரிந்தனர். அரசியல் நோக்கிலேயே வடக்கு முதலமைச்சர் புறக்கணிக்கப்படுவதாக சிலர் குறிப்பிட்டனர்.
 
அரசியலுக்கு அப்பால் வடக்கில் நடைபெறும் முக்கிய நிகழ்வொன்றில் மாகாண முதலமைச்சர் அழைக்கப்படுவதே பண்பு. அப்பண்பு மீறப்படக்கூடாது எனப் பலர் கருத்து வெளியிட்டனர். மேலும், வடக்கு மாகாண முதலமைச்சராக உள்ள சி.வி.விக்னேஸ்வரன் முன்னாள் நீதியரசராவார்.
 
9ம் தேதி திறக்கப்படவுள்ள மல்லாகம் மற்றும் சாவகச்சேரி நீதிமன்றங்களில் அவர் முன்னர் நீதிபதியாக கடமையும் ஆற்றியுள்ளார். எனவே, அவர் இந்த நிகழ்வுக்கு நிச்சயம் அழைக்கபட வேண்டுமென சட்டத்தரணிகள் பலர் அழுத்தமாக வலியுறுத்தினர்.
 
இவ்வாறான கருத்தாடல்களின் பின்னரே வடக்கு முதலமைச்சரை திறப்பு விழாவுக்கு அழைக்க்கோரும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, சட்டத்தரணிகளிடையே வாக்கெடுப்புக்கு விடப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
இத்தீர்மானத்தின் பின்னரும் முதலமைச்சர் அழைக்கப்படாவிட்டால், அடுத்தகட்டமாக நிகழ்வை புறக்கணிக்கும் முடிவையே எடுக்கவேண்டி ஏற்படும் என இந்தக் கலந்துரையாடல்களில் கலந்துகொண்ட பின்னர் கருத்து வெளியிட்ட யாழ். சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவர் கருத்து வெளியிட்டார்.

வடக்கு ஆளுநருக்கு பதவி நீடிப்பு இல்லை: ஆறு மாதத்தில் புதிய ஆளுநர் நியமனம்!.

Sunday,5th of January 2014
வட மாகாண ஆளுனருக்கு இனிமேல் பதவி நீடிப்பு வழங்கப்படாது என்றும், அவரது பதவிக்காலம் முடிந்த பின்னர் புதிதாக சிவில் ஆளுனரை நியமிப்பதாகவும், வடக்கு மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வாக்குறுதி அளித்துள்ளார்.
 
வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுடன், கடந்த வியாழக்கிழமை அலரி மாளிகைக்குச் சென்று மகிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேசியிருந்தார். வடக்கு மாகாண சபையின் சுமுகமான செயற்பாட்டுக்கு காணப்படும் முட்டுக்கட்டைகள் குறித்து ஜனாதிபதியிடம் வடக்கு மாகாண முதல்வர் சுட்டிக்காட்டியிருந்தார்.
 
முக்கியமாக, இராணுவப் பின்னணியைக் கொண்ட ஆளுனரை நீக்கி விட்டு, சிவில் ஆளுனரை நியமிக்க வேண்டும் என்று முதல்வர் விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு, தற்போதைய ஆளுனரை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுத்தால், பல பிரச்சினைகள் உருவாகலாம் என்றும், அதனால் அவரது பதவிக்காலம் முடியும் வரை பொறுத்திருக்கும்படியும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
 
மேஜர் ஜெனரல் சந்திரசிறியின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில், அவரது பதவிக்காலம் முடிந்த பின்னர், புதிய சிவில் ஆளுனரை நியமிப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
 
அதேவேளை, வடக்கு மாகாண சபையின் தலைமைச் செயலராக உள்ள விஜயலட்சுமி ரமேசுக்குப் பதிலாக, திருவாகரனை நியமிக்க வேண்டும் என்றும் வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார். மேலும், மாகாண சபைக்கான நிதி ஒதுக்கீடு குறித்தும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...