Thursday, December 19, 2013

தென்னிலங்கை வியாபாரிகளை தடைசெய்து கட்டுப்படுத்தும் வகையில் மாகாண சபை மூலம் நியதிச் சட்டம் கட்டுப்படுத்த முடியும்: டெனிஸ்வரன்!

20th of December 2013
உள்ளூர் உற்பத்திகளை சகல வர்த்தகர்களும் முன்னிலைப்படுத்த வேண்டும் என வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிபம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.

வட மாகாண அமைச்சர்கள், யாழ். மாவட்ட வர்த்தகர்கள் மற்றும் வங்கி முகாமையாளர்களுக்கிடையில் நேற்று இடம்பெற்ற விசேட ஒன்றுகூடலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தில் இடம்பெற்ற இச் சந்திப்பில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

வட மாகாணத்திற்கான ஒதுக்கீடுகள் என்பது மிகவும் குறைந்த நிலையில் காணப்பட்டாலும், எமது வர்த்தகர்களை நிச்சயமாக ஏதோ ஒரு வழியில் முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன்.

எதிர்காலத்தில் பல சர்வதேச மற்றும் உள்நாட்டு தொண்டு நிறுவனங்கள் வர்த்தக வாணிபத்திற்கு உதவ முன் வந்துள்ளன.

உள்ளூர் உற்பத்திகளை சகல வர்த்தகர்களும் முன்னிலைப்படுத்த வேண்டும். அதனூடாக எமது மக்களிடம் பணப் புழக்கதினை மீண்டும் உருவாக்க முடியும். தென்னிலங்கை வியாபாரிகளை தடைசெய்வது என்பது முடியாத காரியம்.

அவர்களை கட்டுப்படுத்தும் வகையில் எமது மாகாண சபை மூலம் நியதிச் சட்டங்களை உருவாக்கி அவர்களை கட்டுப்படுத்த முடியும்.

எதிர்காலத்தில் உங்களது ஒத்துழைப்பிருந்தால் ஒரு நிர்ணய விலையின் கீழ், சகல வர்த்தகர்களும் தங்களது பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் எமது மக்களது எண்ணங்களை மாற்றமடைய செய்து தென்னிலங்கை வியாபாரிகளின் வருகையை முற்றாக நிறுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.

இதன்போது வர்த்தகர்கள் எதிர்நோக்கியுள்ள வங்கிக் கடன் மற்றும் ஏனைய வர்த்தக பிரச்சினைகள் மற்றும் எதிர்காலத்தில் யாழ் வர்த்தகத்தை எவ்வாறு மீளக் கட்டி எழுப்புவது போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...